டெல்லி:

மிழகஅரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தடை விதிக்கும் நோக்கில் டெல்டா மாவட்டங்களை வேளாண்ட மண்டலமாக மாற்றி சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், தமிழகத்தில் மேலும்  3 ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் கூறி உள்ளார். இது தமிழக எம்.பி.க்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், திமுக எம்.பி, திருச்சி சிவா, பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்து  கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர்  தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசின் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷனுக்கு ஒரு திட்டமும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 2 திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்பவடி,  தமிழ்நாடு, புதுவையில் 2337 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனமும், ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் நிறுவனம் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் 477 சதுர கிலோ மீட்டரிலும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தனது 2 திட்டங்கள் மூலமாக கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகியவற்றில் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இதில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் 1259 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் திட்டங்களை நிறைவேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த திட்டங்களுக்கு தமிழக அரசு தரப்பில் இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்தார்.