சென்னை: புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை நியமனம் செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் மாநிலத்தில்வ அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முதல்வர் ரங்கசாமி பாஜகவின் நெருக்குதலுக்கு பனிந்து போவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாஜக எம்எல்ஏக்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதால், அதிகாரப்பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் ரங்கசாமி பாஜக கூட்டணியில் ஆட்சி அமைக்க வேண்டும் அல்லது பாஜக  இருந்து விலகி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற சூழல் எழுந்துள்ளது. அதே வேளையில், பாஜக, என்ஆர்காங்கிரஸ் கட்சி உள்பட மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களை வளைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

30 தொகுதிகiளக் கொண்ட புதுவை சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் -10 தொகுதிகளை கைப்பற்றியது.  பாரதிய ஜனதா  6 தொகுதிகளை கைப்பற்றியது. இதனால், பாஜக ஆதரவுடன் முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றார். ஆனால், அவரால் அமைச்சரவை ஏற்படுத்த முடியாத சூழல் தொடர்ந்து வருகிறது. துணைமுதல்வர் உள்பட பல அமைச்சர் பதவிகள் கேட்டு பாஜக தொல்லைக்கொடுத்து வருவதால், அவரால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

இதற்கிடையில், மத்தியஅரசு தரப்பில் இருந்து புதுச்சேரி சட்டமன்றத்திற்கு கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகியோரை நியமன எம் எல் ஏக்களாக நியமித்து  உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து, அவர்களும் நியமன எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர்.  இதற்குத் தடை விதிக்க கோரி சென்னை  உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு,  புதுச்சேரியில், 3 எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என தீர்ப்பளித்து, நியமனத்தை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதன் காரணமாக அங்கு அரசியல் பரரப்பு ஏற்பட்டு உள்ளது. பாஜக எம்எல்ஏக்களின் பலம் 9ஆக அதிகரித்துள்ளதால், முதல்வர் என்.ஆர்.ரங்கசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மாநிலத்தின் துணை முதல்வர் பதவி, சபாநாயகர் பதவி மற்றும் அமைச்சர்கள் பதவிகள் கேட்டு நெருக்குதல் கொடுப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள முதல்வர், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரசுடன் கைகோர்க்கலாமா என்று திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், பாஜக தரப்பில் இருந்து, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்களுக்கு வலைவீசப்பட்டு உள்ளதாகவும், ரங்கசாமி காங்கிரஸ் கட்சியை கூட்டணி சேர்த்தால், அவரது ஆட்சியை கவிழ்த்துவிட்டு, மாற்றுக்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டு இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ரங்கசாமி பணிந்து போவாரா அல்லது பலிகடாவாகப் போகிறரா என்பது ஓரிரு நாளில் தெரிந்து விடும்.