சென்னை:

மிழக அரசியலில் தேர்தல் பரபரப்பை தொடர்ந்து, டிடிவி ஆதரவாக செயல்பட்டு வரும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்பான விவகாரம் சூடுபிடித்து வருகிறது.

ஏற்கனவே 18 டிடிவி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக, சபாநாயகர் தீர்ப்பில் நீதிமன்றங்கள் தலையிட மறுத்து, அவர்களது பதவி பறிபோய், தற்போது இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், தற்போது டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும்  3 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குறிப்பிட்ட 3 எம்எல்ஏக்களும், தாங்கள் அதிமுகவிலேயே தொடர்வதாகவும், இனிமேலும் தொடருவோம் என்று அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், இன்று டிடிவியை சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல்,  தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் 3 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தாலும் பரவாயில்லை. நாங்கள்  நீதிமன்றம் செல்ல மாட்டோம். தேர்தலை சந்திப்போம் என்று தெனாவெட்டாக கூறியுள்ளார்.

மேலும், தங்களின் ஸ்லீப்பர் செல்கள் அதிமுகவில் இன்னும் உள்ளனர். சிலர் அமைச்சர் களாகவும் இருந்து வருகின்றனர் என்றும் குண்டை தூக்கி போட்டுள்ளார். வெற்றிவேலின் தெனாவெட்டான பதில் அதிமுக எம்எல்ஏக்களின் வயிற்றில் புளியை கரைத்து உள்ளது.

ள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ.கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் கட்சியை பாதிக்கும் வகையில் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே 3 எம்.எல்.ஏ.க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக கொறடா  சபாநாயககர் தனபாலை நேற்று சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார்.

இதையடுத்து, 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர்கள் தகுதி நீக்கம் செய்யப் படலாம் என்று தகவல்கள் பரவி வருகிறது.

அதிமுகவுக்கு இன்னும் இரண்டு ஆண்டு காலம் ஆட்சி உள்ள நிலையில், பதவி சுகத்தை கண்ட எம்எல்ஏக்கள் அதை விட்டுவிட முன்வருவார்களா?…..

அதிமுக தலைமை எடுத்துவதும் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள  கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு,  சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தான் வாக்களித்துள்ளோம். அ.ம.மு.க என்பது அ.தி.மு.க.வின் அங்கம் தானே தவிர இது தனிக்கட்சி கிடையாது. எதற்காக அரசு கொறடா எங்களை தகுதி நீக்கம் செய்வதற்கு மனு அளித்துள்ளார் என்பது தெரியவில்லை. நாங்கள் வேறு எந்தக் கட்சியிலும் சேர்ந்து விடவில்லை. நடைபெறுகின்ற இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் அரசு கொறடாவின் உத்தரவின் படியே செயல்படுவேன்.  முதல்-அமைச்சர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.அரசின் கீழ்தான் செயல்பட்டுகொண்டு இருக்கிறேன் என்று கூறி உள்ளார்.

அதுபோல,  விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன்னும்,  . ஜெயலலிதா முதல்-அமைச்சராக வர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுதி மக்கள் என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தார்கள். அன்று முதல் இன்று வரை அ.தி.மு.க.விற்கும், இந்த அரசுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தன்  நிகழ்ச்சிகளில் எதிலும் நான் கலந்து கொள்ளவில்லை, என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக அரசுக்கு ஆதரவாகவும், அ.தி.மு.க.விற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறோம். இனியும் செயல்படுவோம் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

அறந்தாங்கி எம்எல்ஏ  ரத்தின சபாபதி கூறும்போது,  என்னை உருவாக்கிய இயக்கம் அதிமுக, அந்த இயக்கம் உருகுலைந்து விடக்கூடாது என நினைத்தேன் என்றும்,   இரண்டு அணிகளையும் இணைக்க நான் முயற்சி செய்தேன். அதற்காக கிடைத்த பரிசு தான் இது என்றும், தான் ஒருபோதும் அதிமுகவுக்கு எதிராக செயல்படவில்லை என்றார்.

அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரம்தான் தமிழகத்தில் தற்போது டிரென்டிங்காகி வருகிறது.