சிங்ரவுலி: மத்திய பிரதேசத்தில் 2 சரக்கு ரயில்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் ரிஹாந்த் நகரில் இருந்து நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயில் ஒன்று தேசிய அனல்மின் கழகத்திற்கு புறப்பட்டு சென்றது. அதேபோன்று காலியான மற்றொரு சரக்கு ரயில் எதிரே வந்தது.

மத்திய பிரதேசத்தின் சிங்ரவுலி பகுதியில் இந்த இரு சரக்கு ரயில்களும், திடீரென ஒன்றுடன் ஒன்று மோதின. விபத்தில் நிலக்கரி ஏற்றிச் சென்ற ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன.

மற்றொரு ரயிலின் பெட்டிகளும் தடம் புரண்டன.  விபத்தில் சரக்கு ரயில் ஓட்டுனர், உதவி ஓட்டுனர் சிக்கியிருக்க கூடும் என்று தெரிகிறது. தகவல் அறிந்து போலீசார் மற்றும் தேசிய அனல்மின் கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று மீட்பு பணியில் இறங்கினர்.

இந்த விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறி உள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.