காந்திநகர்:

குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகே உள்ள பிரன்ஸ்லா கிராமத்தில் சுவாமி தர்மபந்துஜி தலைமையில் மாபெரும் ஆன்மீக முகாம் நடைபெற்றது. ராஷ்ட்ர கத ஷிபிர் என்ற அமைப்பு சார்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய முகாம்களை நடத்தப்பட்டு வருகிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்வது வழக்கம். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோரும் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

முகாமின் இறுதி நாளான இன்று அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் பீதியில் ஓடினர்.

அப்போது நெரிசலில் சிக்கி 3 சிறுவர்கள் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர். தீ விபத்துக்கு மின் கசிவு காரணம் என்று கண்டறியப்பட்டது. தகவலறிந்த தீயனைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.