டெல்லி:

கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் உள்ள ஐந்து மண்டலங்களை சேர்ந்த 20 ஆயிரம் ரயில் பெட்டிகள் கொரோனாவுக்காக தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதன் மூலம் 3.2 லட்சம் பேர் சிகிச்சை பெற முடியும்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், நோயாளிகள் தனிமைப்படுத் தப்பட்டு சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் மருத்துவமனைகளில் இல்லாத நிலையில், தற்காலிகமாக  ரயில் பெட்டிகள் கொரேனா  வார்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது.

அதன்படி, சுமார்  20 ஆயிரம் ரயில் பெட்டிகளை, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தும் ரயில் பெட்டிகளாக மாற்றத் தயாராக இருப்பதாக இந்திய ரயில்வே  தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ஆயுதப்படை மருத்துவ சேவைகள், பல்வேறு மண்டல ரயில்வேயின் மருத்துவத் துறை மற்றும் ஆயுஷ்மான் பாரத், சுகாதார அமைச்சகம் மற்றும் மையத்துடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு இருப்பதாகவும், இதைத்தொடர்ந்து ,தனிமைப்படுத்தும் ரயில் பெட்டி மாதிரிகளை ஐந்து மண்டல ரயில்வே ஏற்கனவே தயாரித்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.

மேலும்,  20 ஆயிரம் ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்காக மாற்றப்பட்டு வருவதாகவும், இதன் மூலம்  3.2 லட்சம்  பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் படுகைகளுடன் கூடிய வார்டுகள் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டு உளளது.

தற்போதைய நிலையில், முதல்கட்டமாக  நாடு முழுவதும் உள்ள 5 மண்டலங்களில் 500 ரயில் பெட்டிகள் தேர்வு செய்யப்பட்டு வார்டுகளாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த பெட்டிகள் மூலம் 80 ஆயிரம் படுக்கைகள் கொண்ட வார்டுகள் உருவாக்கப்படும்,  அதாவது ஒரு ரயில் பெட்டியில் தனிமைப்படுத்த 16 படுக்கைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரயில்பெட்டிகளில்,  ஒரு இந்திய பாணி கழிப்பறை குளியல் அறை  மற்றும் வாளி, குவளை மற்றும் சோப்பு விநியோகிப்பான் ஆகியவையும்  பொருத்தப்பட்டிருக்கும். லிப்ட் வகை கைப்பிடியுடன் கூடிய குழாய்கள் வாஷ்பேசின்களில் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஒவ்வொரு பெட்டியின் ஒரு பகுதி துணை மருத்துவப் பகுதியாகப் பயன்படுத்தப்படும் என்றும், இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் மருத்துவத் துறையால் வழங்கப்படும், இதற்காக இந்த கேபினின் பக்கவாட்டுப் பக்கத்தில் பொருத்தமான கிளாம்பிங் ஏற்பாடு  செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொசு நுழைவதைத் தவிர்ப்பதற்காக ஜன்னல்களில் கொசு வலைகள், சரியான காற்றோட்டமும் இருக்கும் வகையில் பெட்டிகள் வடிவமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கேபினிலும் மூன்று டஸ்ட்பின்கள் சிவப்பு, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்தில் வைக்கப்படும். இந்த குப்பை தொட்டிகள் காலால்-இயக்கப்படும் வகையில் இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது. அத்துடன்,   ரயில் பெட்டியின் ஒவ்வொரு பக்கமும் ஜன்னல்களுக்கு மேலேயும் கீழேயும் மடிக்கணினி மற்றும் மொபைலுக்கான அனைத்து சார்ஜிங் பாயிண்டுகளும் இருக்கும் என்றும் ரயில்வே தெரிவித்து உள்ளது.