ராமேஸ்வரம்:

ச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த அரசியல் குழப்பத்தால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அங்கு அரசியல் குழப்பங்கள் முடிவடைந்த நிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கை  மீண்டும் தொடங்கி உள்ளது.

கச்சத்தீவு அருகே புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படை   தமிழக மீனவர்களின் படகுகள் மீது கப்பலை மோதி சேதப்படுத்தி அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த  28 பேரைக் கைது செய்துள்ளனர்.

இவர்களில் 20 மீனவர்கள், 2 விசைப்படகுகள்  நடுக்கடலில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், கஞ்சா வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை  ஊர்காவல்துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 17ந்தேதி வரை சிறையில் அடைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.