இந்தியா திரும்ப கடும் போட்டி..  ஒரு மணிநேரத்திற்கு 25 ஆயிரம் பேர் பதிவு..

மாதிரி புகைப்படம்

இந்தியாவில் இருந்து வேலை நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று வசிப்பவர்களில் கேரள மாநிலத்தவர் தான் அதிகம்.

கொரோனாவால் பீதியும், அச்சமும் அடைந்துள்ள அவர்கள், சொந்த மாநிலத்தில் கால் பதிக்கத் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெளிநாட்டு வாழ் கேரளத்தினருக்கான விவகாரத்துறை ( நோர்கா) வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவோருக்கான முன்பதிவை ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது.

ஆன்லைனில் நடைபெற்ற இந்த முன்பதிவில் ஒரு மணி நேரத்தில் 25 ஆயிரம் வெளிநாட்டு வாழ்  கேரளத்தினர் ஊர் வருவதற்குப்  போட்டிப் போட்டு முன்பதிவு செய்தனர்.

திங்கள் கிழமை காலை வரை முன்பதிவு செய்தோர் எண்ணிக்கை ஒன்றரை லட்சம்.

வளைகுடா நாடுகளில் இருந்து மட்டும் சுமார் 60 ஆயிரம் பேர்  ஊர் திரும்ப முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதியோர், குழந்தைகள், நோய்வாய் பட்டோர் ,இதில் அடங்குவார்கள்.

‘தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை ‘ என்று அந்த நாட்டுச் சுகாதாரத்துறையில் சான்றிதழ் வாங்கினால் மட்டுமே விமானம் ஏற அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மே மாதம் 3 ஆம் தேதி ஊரடங்கு  முடிவுக்கு வந்து என்ற நம்பிக்கையில், இவர்கள் முன்பதிவு செய்து காத்துள்ளனர்.

நம்பிக்கை தானே வாழ்க்கை.

 

– ஏழுமலை வெங்கடேசன்