உண்மையை மறைத்தது ஏன்?..  பாடகி கனிகாவுக்கு நோட்டீஸ்..

கொரோனா பரவலில் டெல்லி மாநாட்டுக்கு நிகரான பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார், இந்தி பாடகி கனிகா கபூர்.

இங்கிலாந்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி மும்பை வந்தவர், அடுத்தடுத்த நாட்களில் லக்னோவில் ’’ஜாலியாக’’ சுற்றித்திரிந்தார்.

தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளத் தவறியதோடு மட்டுமில்லாமல், பல்வேறு விருந்துகளில் கலந்து கொண்டார்.

அதில் ஒரு விருந்து ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா உள்ளிட்டோர்  பங்கேற்ற, விருந்து நிகழ்ச்சி என்பதால்,அதில் கலந்து கொண்ட, வி.வி.ஐ.பி.க்கள் கலக்கமடைந்தனர்.

கொரோனாவை பரப்பவிட்டதாக கனிகா மீது லக்னோவில் உள்ள சரோஜினி நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

40 நாட்களாக அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தன் மீது எந்த தவறும் இல்லை என்ற ரீதியில் கனிகா ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.

 சும்மா இருக்குமா போலீஸ்?

வரும் 30 ஆம் தேதி சரோஜினி நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கனிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, உ.பி.போலீஸ்.

‘’ ஆஜராக விட்டால் கைது செய்து சிறையில் அடைப்போம்’’ என்று போலீசார்  எச்சரிக்கை விடுத்துள்ளதால், ‘’ அவசரப்பட்டு அறிக்கை வெளியிட்டு விட்டோமே?’’என்று புலம்புகிறார், கனிகா.

– ஏழுமலை வெங்கடேசன்