சென்னை: 24மணி நேர தொலைபேசி எண் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

சென்னையில் கனமழை காரணமாகப் பல இடங்களில் மழை நீர் வெள்ளமாகத் தேங்கி உள்ளது.  பல சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை திருப்பி விடப்பட்டு உள்ளது. பல சுரங்க பாலங்களில் மழை நீர் புகுந்துள்ளன,  அவற்றை வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. 

சென்னை மழை  மற்றும் வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் 24 மணிநேர அவசர கட்டுப்பாட்டு அறை அமைத்து உதவி செய்து வருகிறது. மேலும் அவசர  தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி 1013  மற்றும் 044 25619206, 044 25619207, 044 25619208 ஆகிய எண்களிலும் 9445477205 என்ற  வாட்ஸ்அப் எண் வழியாகவும் புகார்களை அளிக்கலாம்.

மேலும்,  மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்டி,

மழைக்காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு காலரா, மஞ்சள் காமாலை டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவும்.

உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறையை பயன்படுத்திய பிறகும் சோப்பு உபயோகப்படுத்தி முறையாக 20 நொடிகள் கைகளை நன்கு தேய்த்து கழுவவும்.

வீட்டிற்கு வெளியில் செல்லும்போது காலணிகளை அணிந்து செல்லலாம். வீட்டிற்கு வெளியில் சென்று வந்த ஒவ்வொரு முறையும் கை கால்களை சோப்பு தேய்த்து கழுவவும்.

சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் பம்புகளில் தேங்கிய நீரை குடிநீராக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களை உண்பதை தவிர்க்கவும். சமைத்தவுடன் உணவினை சூடான நிலையிலேயே சாப்பிடவும். பழைய உணவினை சாப்பிடுவதை தவிர்க்கவும்,

திறந்த வெளியில் மலம் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து, பொது கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனை மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெறவும், சுய சிகிச்சை செய்யக் கூடாது.

வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால், உப்பு சர்க்கரை கரைசல் (ORS Solution) மற்றும் வீட்டிலுள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருகவும். உடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்

தங்கள் வீட்டிலுள்ள மேல்நிலை / கீழ்நிலை தொட்டிகளை வாரம் ஒரு முறை பீளீச்சிங் பவுடர் கொண்டு வேண்டும். நன்கு தேய்த்து கழுவி உலர வைத்து பயன்படுத்த வேண்டும்.

தேங்க வாய்ப்புள்ள அனைத்து தேவையற்ற பொருட்களை அகற்றி கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்கவும்.

சுகாதாரத்தை காக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.