சென்னை: தமிழக அரசின் இ-சேவை மையங்களில் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் உள்பட 23 வகையான சான்றிதழ்களை  பெறலாம் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை, மாணாக்கர்கள் சான்றிதழ் பெறுவது தொடர்பான அரசாணை வெளியிட்டு உள்ளது. அதில், கல்வித்துறை சம்பந்தப்பட்ட  23 வகை யான  சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் மாணவர்கள் பெற்றுக்கொள்ள வகையில் புதிய திட்டம் வகுக்கப்பட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த சட்டமன்ற தொடர் விவாதத்தின்போது, கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்ப்பட்டு உள்ளது.

இதுதொடர்பான வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பள்ளிக் கல்வித் துறையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றுகளான நன்னடத்தைச் சான்று, ஆளறிசான்று, தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட அனைத்துச்சான்றுகளும் அவர்தம் இல்லத்திற்கு அருகில் உள்ள அரசு பொதுசேவை மையங் களின் வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றிப் பெற்றுக் கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வித் துறையில் உள்ள பல்வேறு இயக்ககங்களின் வாயிலாக இரண்டாம்படி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் நகல், புலப்பெயர்வு சான்றிதழ் (Migration Certificate), கல்வி இணைச் சான்றிதழ் (Equivalence Certificate), தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான சான்றிதழ் போன்ற பல்வேறு வகையானச் சான்றிதழ்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த பல்வேறு அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வாயிலாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெற்று வருகின்றனர்.

இச்சேவைகள் சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வந்தாலும், மாணவர்கள். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கே நேரில் சென்று பெற்றுவரும் நிலை இருந்து வருகிறது என்றும் இதனால் சம்பந்தப்பட்ட நபருக்கு காலவிரையம் மற்றும் பணவிரையம் ஏற்படுவதுடன், அரசு அலுவலகங்களுக்கும் பணிச்சுமை கூடி வருகிறது. எனவே, பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் மாணவர்கள் பெற்றுக்கொள்ள புதிய திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.