சென்னை:
சென்னை பழைய மகாபலிபுரம் சாலைப்பகுதியில் துரைப்பாக்கம் அடுத்து அமைந்துள்ள குடிசை மாற்று வாரியப் பகுதியான கண்ணகி நகர் குடியிருப்பில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இது அந்த குடியிருப்புவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தை கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. நேற்று ஒரே நாளில்,  798 பேருக்கு  பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்  கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது.   சென்னையில் 4371 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை ஒ.எம்.ஆர் சாலை துரைப்பாக்கம் அருகே உள்ள செம்மஞ்சேரி கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அங்கு  சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. ஏறத்தாழ 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்த நெருக்கடி மிகுந்த பகுதியில் 23 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பலருக்கு  எளிதாக பரவி இருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு காரணம்,  பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது.