சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024ம் ஆண்டின்  முதல் கூட்டம்  வரும் 12ந்தேதி (பிப்ரவரி)  ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சட்டப்பேரவை செயலகம் அறிவித்து உள்ளது.

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இந்த ஆண்டு முதலீட்டாளர் மாநாடு, முதல்வர் வெளிநாடு பயணம் போன்றவற்றால், பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும், கடந்த ஆண்டு ஆளுநர் உரை சர்ச்சையான நிலையில், ஆளுநர் அவையில் இருந்து வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு ஆளுநர் உரை வாசிக்க அவர் அழைக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஆளுநர் உரையுடன் பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என சமீபத்தில் சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தார்.

இடையே உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல் காரணமாக ஆளுநரும், முதல்வரும் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து சில மசோத்தாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்து வைக்க ஆளுநர் அனுமதி அளித்தார்.  இதையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவது உறுதியானது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ‘‘சட்டப்பேரவை பிப்ரவரி 12-ம் தேதி காலை 10 மணிக்கு கூடும். அன்றைய தினம்ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார்’’ என்று அறிவித்தார். தமிழகஅரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19-ம் தேதி தாக்கல் செய்வார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், தமிழக பட்ஜெட்டும் விரைவாக தாக்கல் செய்யப்படுகிறது.

முன்னதாக சட்டப்பேரவை ஆண்டு முதல் கூட்டத்தில், ஆளுநர் உரையாற்றியதும், அவரது உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசிப்பார். அதைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வு குழு கூடி, பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்து அறிவிக்கும். அந்த வகையில், அடுத்த 3 நாட்கள் வரை கூட்டம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன், பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதும் அன்றே முடிவு செய்யப்படும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையே, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளதால், பேரவை அரங்கம் வண்ணம்பூசப்பட்டு, இருக்கைகள், மேஜைகளில் வார்னிஷ் அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. சட்டப்பேரவை அரங்கம் அமைந்துள்ள கட்டிடத்தின் முகப்பு பகுதி, ஆளுநர், பேரவைத் தலைவர் வருகை தரும் பகுதிகள், உறுப்பினர்கள் வரும் வாயில்கள், எதிர்க்கட்சி தலைவர் அறை அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட இடங்களும் தயாராகி வருகின்றன.