சென்னை: சென்னையில் தீபாவளி பண்டிகை கழிவுகளை அகற்ற 20 ஆயிரம் பணியாளர்களை களமிறக்கி உள்ளதாக சென்னை  மாநகராட்சி  தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும்  நேற்று (நவ.12) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக மக்களும் தீபாவளி பண்டிகையை புத்தாடை அணிந்து, வெடிவெடித்து, இனிப்புகளுடன் சிறப்பாக கொண்டாடினர். தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், அதை கண்டுகொள்ளாமல்,   அதிகாலை முதல் இரவு வரை விதவிதமாக பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். இதை கண்ட காவல்துறையினர் பல இடங்களில், தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்களை போலீசார் கண்காணித்து வழக்குப்பதிவு செய்தனர்.

பட்டாசு வெடித்ததால் ஒருபுறம் காற்று மாசு அதிகரித்த நிலையில், மற்றொருபுறம் பட்டாசின் குப்பைகளும் அதிகரித்துள்ளன.  பட்டாசு வைக்கப்பட்ட அட்டைப்பெட்டிகள் என கழிவுகள் தெருக்களில் குவிந்துள்ளது.  மேலும் பட்டாசு கழிவுகளால் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் இதனை உடனுக்குடன் அப்புறப்படுத்த அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் துரிதமாக செயல்பட தொடங்கியுள்ளது.

சென்னையில் மட்டும் தீபாவளி பண்டிகை கழிவுகளை அகற்ற 20 ஆயிரம் பணியாளர்களை மாநகராட்சி ஏற்பாடு செய்து உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் பட்டாசு கழிவுகளை சேகரிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கழிவுகளை கொண்டு செல்ல ஏதுவாக மண்டலத்துக்கு 2 வாகங்கள் என 30 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு முதலே தூய்மை பணியாளர்கள் பட்டாசு கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள கழிவு மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுகிறது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் மட்டும் சுமார் 63.76 டன், அதற்கு மறுநாள் 39.4 டன் பட்டாசு கழிவுகள் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டது. சென்னையில் நாள்தோறும் சுமார் 5 டன் கழிவுகள் சேகரிப்பட்டு அப்புறப்படுத்தப்படும் நிலையில் பட்டாசு கழிவுகளை தனியாக சேகரித்து வழங்க பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.