போபால்

நாட்டையே உலுக்கிய மத்தியப் பிரதேச வியாபம் நுழைவுத் தேர்வு ஊழல் வழக்கை விசாரித்து வரும் 20 சிபிஐ அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மருத்துவக் கல்லூரி மேற்படிப்பு உட்பட பல கல்விகளுக்காக மத்தியப் பிரதேச அரசு நடத்திய வியாபம் தேர்வில் பெருமளவில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.    அதை ஒட்டி அரசு விசேஷ விசாரணைக் குழு ஒன்று காவல்துரையினரால் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.   அதன் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2015ஆம் வருடம் சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டது.

அதை ஒட்டி போபால் நகரில் சிபிஐ “சிறப்பு வியாபம் ஊழல் விசாரணைக் குழு” ஒன்றை அமைத்தது.   அதில் சிபிஐ யின் 100 அதிகாரிகள் சேர்க்கப்பட்டனர்.    போபால் நகரில் புரபசர் காலனி பகுதியில் அமைக்கப்பட்ட இந்த அலுவலகத்தில்  இந்த அதிகாரிகள் பணி புரிந்து வந்துள்ளனர்.  தற்போது அவர்களில் 20 பேர் திடிரென ஒரே நாளில் மற்றப்பட்டுள்ளனர்.   விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டுள்ள போது இந்த இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே கே மிஸ்ரா, “இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்னும் எதிர்பார்ப்புடன் காங்கிரஸ் கட்சி சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்தது.   அதை அடுத்து சிபிஐ விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது.  தற்போது இந்த ஊழலில் 40 முதல் 50 வரை முறைகேடுகள் இன்னும் விசாரணை முடியாமல் உள்ளது.  இந்நிலையில் இந்த இடமாற்றம் நடந்துள்ளது.  இதன் மூலம் இந்த குழு முடங்கப்படும் அபாயம் உள்ளது”  எனக் கூறினார்.

இது குறித்து சிபிஐ அலுவலக அதிகாரி ஒருவர், “50 முறைகேடுகளின் விசாரணை முடியவில்லை என்பது உண்மைதான்.  ஆனால் அவை முடியவில்லையே தவிர முடியும் தருவாயில் உள்ளது.   இதுவரை 100க்கும் மேற்பட்ட முறைகேடுகளில் விசாரணை முடிந்து குர்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.    இடமாற்றம் என்பது வழக்கமான ஒன்றுதான்.   சிபிஐயின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதிகாரிகள் தேவைப்பட்டதால் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.