சென்னை: திருச்சி உறையூர், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்  பதிவுத்துறை அலுவலகங்களில் நேற்று மதியம் முதல் நடைபெற்று வந்த வருமான வரித்துறையினரின் சோதனை சுமார் 20மணி நேரத்துக்கு பிறகு இன்று காலை நிறைவு பெற்றது. இந்த சோதனையின்போது, ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை  நடைபெற்றது. நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கிய சோதனை விடிய விடிய நடைபெற்றது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்  . திருச்சி, மருதாண்ட குறிச்சியில் உறையூர் சார் – பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. அந்த அலுவலகத்தில், கடந்த சில நாட்களில், பல கோடி ரூபாய்க்கு பத்திரப் பதிவு நடைபெற்று உள்ளது.  ஆனால், பத்திரப் பதிவு அலுவலத்தில் இருந்து, அதற்கான ஆவணங்களை வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று, நான்கு கார்களில் வந்த, பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், உறையூர் சார் – பதிவாளர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று பகல் 12:00 மணியில் இருந்து சோதனை நடைபெற்றது. மேலும், 2,000 ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் நடைபெற்ற பத்திரப் பதிவுகள் குறித்தும், வரி ஏய்ப்பு மற்றும் பொருளாதார குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், அதிக அளவில் பத்திரப்பதிவு செய்துள்ளனரா என்றும் சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  நேற்று மதியம் திடீரென 3 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது பத்திரபதிவிற்காக கொண்டு வரப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும் அண்மையில் நடைபெற்று முடிந்த பத்திரப்பதிவுகள் தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கடந்த சில நாட்களாக செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கோடி கணக்கிலான பல இடங்கள் பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ள நிலையில், அது தொடர்பான ஆவணங்களையும், பத்திரப்பதிவு செய்தவர்கள் குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சுமார்20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனை இன்று காலை  நிறைவு பெற்றுள்ளது.

இந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அந்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைபோல திருச்சி மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.

வருமானத்துறையினரின் அதிரடி சோதனை, பதிவாளர் அலுவலகங்களில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.