சென்னை: கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74 கோடியில் 2 உயர் மட்டப் பாலங்கள்! அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சாலை போக்குவரத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதற்காக ஏராளமான பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு, சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னையில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் நகர் முழுவதும் 3 மேம்பாலங்களைக் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாகவும்,  சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் இந்த மேம்பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வியாசர்பாடி ஜீவா ரயில் நிறுத்தம் அருகே கணேசபுரத்தில் 175 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படவுள்ளது. அதேபோல தியாகராயர் நகர் உஸ்மான் சாலையிலிருந்து அண்ணா சாலை வரை இரண்டு வழி மேம்பாலம் 90 கோடி ரூபாயில் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை,  மாநகராட்சி சார்பில் கூவம் ஆற்றின் குறுக்கே சின்ன நொளம்பூர் பகுதியில் ஒரு உயர் மட்டப் பாலம் அமைக்கப்பட உள்ளது. சின்ன நொளம்பூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள பாலத்திற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு 2022-23-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் சென்னை வளசரவாக்கம் பகுதியிலுள்ள கூவம் ஆற்றின் குறுக்கே யூனியன் சாலையையும் பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் 2 உயர் மட்டப் பாலங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதனடிப்படையில், மாநகராட்சி சார்பில் கூவம் ஆற்றின் குறுக்கே சின்ன நொளம்பூர் பகுதியில் ஒரு உயர் மட்டப் பாலமும், சன்னதி முதல் குறுக்குத்தெருவில் மற்றொரு உயர் மட்டப் பாலமும் அமைக்கப்பட உள்ளது. மேலும் சின்ன நொளம்பூர் பகுதியில் உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள பாலத்திற்காக ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பீடு, வரைபடங்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் வாங்கப்பட்ட நிலங்களை நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் முடிவுற்ற பின் மாநகராட்சியிடம் இலவசமாக ஒப்படைக்க தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சென்னை வளசரவாக்கம் கூவம் ஆற்றின் குறுக்கே பூந்தமல்லி நெடுஞ்சாலையையும், யூனியன் சாலையையும் இணைக்கும் வகையில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. அவை சென்னை மாநகராட்சி சார்பில் சின்ன நொளம்பூர் பகுதியில் ரூ.42 கோடி 71 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், சன்னதி முதலாவது குறுக்குத் தெருவில் ரூ.31 கோடி 65 லட்சம் திட்ட மதிப்பீட்டிலும், மொத்தமாக ரூ.74 கோடியே 36 லட்சம் மதிப்பில் 2 உயர் மட்டப் பாலங்கள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.