சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த   இந்தியா சிமென்ட்ஸ்  தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை 2 நாள் சோதனை நடத்தியது. இதில்,  முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாக  இந்நிறுவனத்தில் சோதனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 (Foreign Exchange Management Act, 1999 (FEMA), “வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் கொடுப்பனவுகளை எளிதாக்குதல் மற்றும் அந்நிய செலாவணியின் ஒழுங்கான மேம்பாடு மற்றும் பராமரிப்பை ஊக்குவிப்பதற்கான நோக்கத்துடன் அந்நியச் செலாவணி தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைத்து, திருந்திய இச்சட்டத்தை 29 டிசம்பர் 1999 அன்று இந்திய நாடாளுமன்றம் இயற்றியது.  இது 1973ஆம் ஆண்டின் அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்திற்கு (FERA) பதிலாக நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் நீட்சியாக பணமோசடி தடுப்பு சட்டம், 2002 இயற்றப்பட்டது. இந்த இரண்டு சட்டங்களை மீறுபவர்களை கண்காணித்து, வழக்கு தொடுக்க அமலாக்க இயக்குனரகத்திற்கு அதிகாரம் உள்ளது.

பிற சட்டங்களைப் போலல்லாமல், இச்சட்டத்தின் விதிகள் மிகவும் கடுமையானதாகும். அந்நிய செலவணி மோசடி வழக்கில் சிக்கிய ஒரு நபர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் வரை குற்றவாளியாகக் கருதப்படுவார். அதேசமயம் மற்ற சட்டங்களின் கீழ் அவர் குற்றவாளி அரசு தரப்பில் என்று நிரூபிக்கப்படும் வரை ஒரு நபர் நிரபராதி என்று கருதப்படுவார். இச்சட்டம் இந்திய ரிசர்வ் வங்கி அந்நிய செலாவனி பரிவர்த்தனைகள் தொடர்பான விதிமுறைகளை இயற்றுவதற்கும், இந்திய அரசு அந்நிய வர்த்தகக் கொள்கைக்கு ஏற்ப, அந்நியச் செலாவணி தொடர்பான விதிகளை இயற்றுவதற்கும் உதவுகிறது.

இந்த சட்டத்தின்படி, சென்னை பட்டிணம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும்,   இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சென்னையை தலைமையிடமாக கொண்டு ‘தி இந்தியா சிமென்ட்ஸ் லிமிடெட்’ என்ற பெயரில் பிரபல தொழிலதிபருக்கு சொந்தமான நிறுவனம் நாடு முழுவதும் இயங்குகிறது.

இந்த நிறுவனத்தில் ஏற்கனவே கடந்த ஆண்டு (2023) அமலாக்கத்துறை மற்றும் வருமானத்துறையினர்   சோதனை நடத்திய நிலையில், தற்போது ஜனவரி 31ந்தேதி மற்றும் பிப்ரவரி 1ந்தேதி  ஆகிய 2 நாட்கள் தொடர் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது,  ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் விதிகளை மீறி, பல  வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு  செய்யப்பட்டது தொடர்பாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும்,  அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி,  அந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள  இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம்,  ‘அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா என சென்னையில் உள்ள எங்கள் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அவர்கள் கேட்ட ஆவணங்களை ஒப்படைத்துள்ளோம். இதனால் எங்கள் நிறுவனத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாங்கள் கருதவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.