சென்னை: மாதம் ஒன்றுக்கு குறைந்த பட்சம்  2கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

நாளை தமிழ்நாடு முழுவதும் 40ஆயிரம் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து,  தடுப்பூசி சிறப்பு முகாம்கள் குறித்துஆய்வு செய்த  தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நாளை மாநிலம் முழுவதும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இதை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், இந்த முகாமில் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளலாம்.தடுப்பூசி சிறப்பு முகாம் கூறித்து. அனைத்து மாவட்டங்கள், சென்னை மாநகராட்சியிலும் இது குறித்த கரோனா விழிப்புணர்வு பதாகைகள், போஸ்டர்கள், மைக் மூலம் அறிவித்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பயனாளிகளுக்கு வழிகாட்டுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முகாமிலும் அதிகபட்சமாக 100-200 பேர் தான் அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம். இரண்டாம் தவணை செலுத்தத் தவறியவர்களும் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திய பிறகு, அவர்களுக்கு ஏதேனும் விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் கோயம்பேடு மார்க்கெட், மீன் மார்க்கெட்டுகளில் அவர்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.  தடுப்பூசி செலுத்திய முதல் மாதத்தில் 3 லட்சம் தான் செலுத்தினோம். ஆனால், கடந்த மாதம் 92 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தியிருக்கிறோம். இம்மாதம் 10 நாட்களிலேயே 40 லட்சத்தைத் தாண்டிவிட்டோம். கூடுதல் தடுப்பூசிகளை தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறூத்துகிறோம்”.

மத்திய அரசிடம் இருந்து  நேற்று வரை (10-ம் தேதி)  17 லட்சம் தடுப்பூசிகள் பெற்றிருக்கிறோம் என்று கூறியதுடன், இந்த மாதம் மேலும் ஒரு கோடி தடுப்பூசி கொடுப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 2 கோடி தடுப்பூசி செலுத்தினால்தான் மீதமுள்ளவர்களுக்கு விரைவில்  தடுப்பூசி செலுத்த முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாளை சென்னையில் 1600, தமிழ்நாடு முழுவதும் 40ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்!