சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (12ந்தேதி)  மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், 40ஆயிரம் தடுப்பூசி  முகாம்களின் மூலம் சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். சென்னையில் 1600 முகாம்கள் நடைபெற உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா 3வது அலை பரவத்தொடங்கி உள்ளதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, நாளை தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில்,  கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயித்து அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது.

வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், (கிராம மற்றும் நகர), கல்வித்துறை, யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் இந்த முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். தடுப்பூசி செலுத்திய பிறகு ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் சிகிச்சை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்படும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

 சென்னையில் மட்டும் 1,600 முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை சென்னையில் மூன்றரை லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ள மாநகராட்சி நிர்வாகம், இப்பணிகளில் தலா 600 மருத்துவர்களையும் செவிலியரையும் ஈடுபடுத்த உள்ளது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 5,800 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று சென்னையில் 400 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. செப்டம்பர் 9 ஆம் தேதி நிலவரப்படி, சென்னை மாநகராட்சி மூலம் 43 லட்சத்து 71 ஆயிரத்து 309 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.