கொல்கத்தா

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் இருவர் தாங்கள் பாஜகவில் இல்லை எனக் கூறி  பாஜக சார்பில் போட்டியிட மறுத்துள்ளனர்.

கேரளாவில் பாஜக அறிவித்த வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்ற ஒருவர் தாம் பாஜகவைச் சேர்ந்தவர் இல்லை எனக் கூறி போட்டியிட மறுத்த நிகழ்வு அனைவரும் அறிந்த ஒன்றாகும்.   கட்சியிலேயே இல்லாதவருக்கு தேர்தல் வாய்ப்பு அளித்த பாஜக குறித்து அனைவரும் கிண்டல் செய்து வந்ததும் தெரிந்ததே.   தற்போது மேற்கு வங்க மாநிலத்திலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு 8 கட்டங்களாக நடைபெற உள்ளன.    இதையொட்டி பாஜக சார்பில் நேற்று ஒரு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  இதில் 148 பேரின் பெயர்கள் இடம்  பெற்றிருந்தன.   இதில் சௌரங்கி தொகுதியின் ஷிகா மித்ரா என்னும் பெண்மணியும்  தருண் சகா என்பவரும் ஆவார்.

இதில் ஷிகா மித்ரா வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில் தாம் பாஜகவில் சேரவும் இல்லை எனவும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவும் இல்லை என அறிவித்துள்ளார்.   இவர் மறைந்த காங்கிரஸ் தலைவர் சோமென் மித்ராவின் மனைவி ஆவார்.   இவர் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார்.

தருண் சகாவின் மனைவி தற்போதைய திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் காசிப்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மாலா சகா ஆவார்.   இந்த தொகுதியில் மாலா சகா கடந்த 2011 முதல் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.   மாலாவுக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட திருணாமுல் காங்கிரஸ் வாய்ப்பு அளிக்கவில்லை.

வேட்பாளர் பட்டியல் வெளியானது அதிர்ச்சி அடைந்த தருன் சகா, “நான் இதே தொகுதியின் திருணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்காகத் தேர்தல் பணி செய்து வருகிறேன்.   நான் பாஜகவில் இதுவரை சேரவில்லை.   அப்படி இருக்க என்னைக் கேட்காமல் எப்படி வேட்பாளராக அறிவித்தனர் என்பது எனக்குப் புரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.