சென்னை

சென்னை மாநகராட்சி 2.79 லட்சம் கட்டிடங்களை மறு அளவீடு செய்வதால் கூடுதல் சொத்து வரி வருமானம் கிடைக்கலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

சொத்து வரியைக் கணக்கீடு செய்ய, சென்னை மாநகராட்சியில், புவிசார் தகவல் வரைபடம் தயாரிக்கப்பட்டது.   இதுவரை‘ட்ரோன்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குடியிருப்பு வீடுகள், வணிக வளாகங்கள், மத்திய, மாநில அரசு கட்டடங்களின் பரப்பளவு கணக்கீடு செய்யப்பட்டது.  இதன் மூலம், 3.10 லட்சம் கட்டடங்களில் சொத்து வரி செலுத்துவதில் மாறுபாடு இருந்தது கண்டறியப்பட்டது.  அவற்றில், 30,899 கட்டடங்களை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் அளவீடு செய்து உறுதி செய்தனர். அவர்களுக்கு, சரியான சொத்துவரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பணியாளர்களின் பணிச்சுமையால், காலவிரயம் ஏற்படுவதைத் தவிர்க்க, மீதமுள்ள 2.79 லட்சம் கட்டடங்கள் அளவீடு செய்யும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   இதன்படி இப்பணிகள், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில், பிரைம் மெரிடீயன் சர்வேஸ் பிரைவேட் லிமிடெட், அருள் நம்பி இன்ஜினியரிங் கன்ஸல்டன்ஸி, அரசு அசோசியேட்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி இந்த நிறுவனங்களுக்கு மாறுபாடு உள்ள கட்டடங்கள் குறித்த விவரங்களை மண்டல வாரியாக பிரித்து வழங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி இந்த, மாறுபட்ட கட்டடங்கள் குறித்த விவரங்களை, https://chennaicorporation .gov.in/gcc/pdf/Assessor.pdf என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் வார்டு, முகவரி, சொத்து வரி ‘பில்’ உள்ளிட்ட அனைத்து விபரங்களும் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து,

“சென்னை மாநகராட்சியின் சொத்து வரி மாறுபாடு தொடர்பாக, சொத்து உரிமையாளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஏப்., மாதம் துவங்கி ஜூலை மாதம் வரை மேற்கொள்ளப்படும் மறுமதிப்பீடு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சொத்து வரி மறுமதிப்பீடு பணிகள் ஒன்பது மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிந்து, மறுமதிப்பீடு வாயிலாக மாநகராட்சிக்குக் கூடுதலாக வருவாய் கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறோம்.”

எனத் தெரிவித்துள்ளனர்