சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 50ஆயிரம் இடங்களில் 16வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கடநத சில மாதங்களாக வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம், பண்டிகை காலத்தையொட்டி, இந்த வாரமும், அடுத்த வாரமும் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
அதன்படி நாளை மாநிலம் முழுவதும் சுமார் 50ஆயிரம் இடங்களிலும் சென்னையில் மட்டும் 1600 இடங்களிலும் 16வது மெகா தடுப்பூசி முகாம் கள் நடைபெற உள்ளது. தடுப்பூசி முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் சென்னை மாநகராட்சி, தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி உள்ளது. மேலும், நம்மைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கான ஒரே வழி, தடுப்பூசி போடுவதும், கோவிட்-க்கு ஏற்ற நடத்தையைப் பின்பற்றுவதும்தான் என்று தெரிவித்துள்ள மாநகராட்சி, தடுப்பூசியின் இரண்டாவது ஷாட் ஒரு சிறந்த பாதுகாப்பு கவசத்தை உருவாக்குகிறது என்று கூறியுள்ளது.