இன்று: காமராஜர் பிறந்த தினம் (1903)
 
ayya4
 
கர்மவீரர் காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச் சென்றார். சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது.
ஓர் இடத்தில் நின்றவர், “இந்தக் கோயிலைக் கட்டுனது யாரு?” எனக் கேட்டார்.
உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரிய வில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர்.
உடனே, சிரித்துக் கொண்டே மேலே இருந்த டியூப் லைட்டை சுட்டிக்காட்டிய காமராஜர், “இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற இந்தக் கோயிலைக் கட்டியவர் யாருன்னு தெரியலே…ஆனா, ஒரு மாதம்கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப் லைட்ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்கன்னு பாருங்களேன்” என்று கூற… உடன் வந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்களாம்!
ஒரு முறை பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். அப்பொழுது காங்கிரஸ் 
தொண்டர்களும் அவர் மீது அன்பு கொண்ட பொதுமக்களும் மாலையணிவித்து மரியாதை 
செலுத்த வந்திருந்தனர்.
வந்திருந்தவர்களில் ஒரு ஆசிரியர் பொதுமக்களின் இடையில் வந்தார்.
அந்த ஆசிரியரைப் பார்த்த காமராஜர், “என்னய்யா! படிக்காதவங்களுக்குப் போய் 
பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நீங்கள் படிக்காதவனுக்கு மாலை போட 
வந்திருக்கிறீர்களே?” என்றார்.
இதைக் கேட்டதும் அந்த ஆசிரியரின் கண்களில் கண்ணீர் மல்கியது.
 பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது, தனது தாயார் சிவகாமி அம்மையாரின் செலவுக்காக மாதம்தோறும் 120 ரூபாய் அனுப்பிக் கொண்டிருந்தார். முதல்-அமைச்சரின் தாயார் என்பதால், விருதுநகரில் வசித்து வந்த சிவகாமி அம்மையாரைப் பார்க்க தினமும் வெளியூர்களில் இருந்து கட்சி சார்ந்தவர்கள், கட்சி சாராதவர்கள், உறவினர்கள்… என்று பலரும் வந்து செல்வார்கள். காமராஜர் மாதம்தோறும் அனுப்பிய 120 ரூபாய் கட்டுப்படியாகவில்லை. தன்னை வீடு தேடி பார்க்க வந்தவர்களுக்கு சோடா, கலர் என்று அவர் வாங்கிக் கொடுப்பதிலேயே அந்த பணத்தின் பெரும் பகுதி செலவானது.
அதனால், தனக்கு மேலும் 30 ரூபாய் சேர்த்து 150 ரூபாயாக மாதம்தோறும் அனுப்பி வைக்குமாறு காமராஜருக்கு தகவல் அனுப்பினார்.
ஆனால், காமராஜர் “யார் யாரோ வீட்டுக்கு வருவார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். வந்தவர்கள் எல்லாம் எனக்கு சோடா வேண்டும், கலர் வேண்டும் என்றா கேட்கிறார்கள்? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்காமலேயே 120 ரூபாயை வைத்து செலவு செய்யலாமே… ஒருவேளை, அம்மா கேட்டபடி கூடுதலாக 30 ரூபாய் அனுப்பினால், அவரது கையில் கொஞ்சம் காசு சேர்ந்துவிடும். கோவில், குளம் என்று கிளம்பிவிடுவார். அது அவரது உடல்நிலைக்கு ஆகாது. அதனால், இப்போது கொடுத்து வரும் 120 ரூபாயே போதும்” என்று ஒரேயடியாக சொல்லிவிட்டார் காமராஜர். 
முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளில் கோப்புக்களை பார்க்க அமருகிறார் காமராஜர்.  அவருக்கு முன்னால் கோப்புகள் இரண்டு வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.  ‘ இது என்ன வரிசை?’ என அவர் கேட்க நேர்முக உதவியாளர் ‘முதல் வரிசையில் உள்ளவை முக்கியமானவை என்றும், இரண்டாவது வரிசையில் உள்ளவை முக்கியம் இல்லாதவை’ என்றும் கூறுகிறார்.  இதனைக் கேட்டு அதிர்ந்து போன காமராஜர் ‘முதல்வருக்கு வரும் கோப்புகளில் முக்கியம் இல்லாதவையும் உண்டா என்ன?’ எனக்கு வரும் ஒவ்வொரு கோப்பும் முக்கியமானதுதான். அவற்றை நான் உடனுக் குடன் பார்த்து அனுப்ப வேண்டும் அதுதான் முக்கியம் என்றாராம்.
அக்கால கட்டத்தில் ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பல விரிவாக்க அலுவலர்கள் பணிபுரிந்து வந்தனர்.  அவர்களில் பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களுக்குப் போதுமான வேலை இல்லை. எனவே அத்தகைய பணியில் இருக்கும் பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம் என்றும் அதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் மிச்சமாகும் என்றும் தலைமைச் செயலர் பரிந்துரைத்தார்.
கோப்பினைப் படித்த காமராஜர் தலைமைச் செயலரை அழைத்து ” ஏங்க! 234 அலுவலர்களைப் பணி நீக்கம் செய்ய சிபாரிசு பண்ணியிருக்கீங்க! அவங்க ஒவ்வொவரும் பட்டதாரிங்க! அஞ்சு வருஷமா அரசாங்கத்துல வேல பாக்கறவங்க! அவங்கள நம்பி குடும்பங்கள் இருக்கு, அவங்கள வீட்டுக்கு அனுப்பினா அவங்க குடும்பங்கள் வீதிக்கு வந்துடுமே! இது பெரிய பாவம்ங்க! அவங்களுக்கு போதுமான வேல இல்லேண்ணா புதிய பொறுப்புக்களை கொடுங்க. அரசின் பணம் மட்டும் எனக்கு முக்கியமில்லே. அரசை நம்பி வாழும் பணியாளர் களின் நலனும் முக்கியம்” என்றார் காமராஜர்.
அவரைப் பார்க்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரும்போது அவர் தன் உதவியாளர்களை அழைப்பார். தெருவில் போகிற முடிவெட்டு கிறவர், துணிவெளுக்கிறவர் என  மிகச்  சாதாரண வாழ்க்கை நடத்தும் ஏழைகளைக் கூப்பிடச் சொல்லுவார். அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முன்பாகவே அந்த ஏழைகளையெல்லாம் நலம் விசாரிப்பார். “என்ன…… உங்களுக்கெல்லாம் அரிசி பருப்பெல்லாம் ஒழுங்கா கிடைக்குதா? விலைவாசி நிலையெல்லாம் எப்படி இருக்கு? உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை இருக்குது?” என்றெல்லாம் கேட்டு அவர்கள் என்ன சொல்லு கிறார்கள் என்று உன்னிப்பாக கவனிப்பார்.
(பல்வேறு இணையதள பக்கங்களில் இருந்து..)