டெல்லி: நாடு முழுவதும் 1472 ஐஏஎஸ், 864 ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்து உள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது.  இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்,

2022 ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 1472 ஐஏஎஸ் பணியிடங்களும், 864 ஐபிஎஸ் பணியிடங்களும் காலியாக உள்ளன என குறிப்பிட்டு உள்ளார்.

நேரடியாக பணியமர்த்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் உகந்த சேர்க்கையை உறுதி செய்வதற்காக பஸ்வான் கமிட்டியின் பரிந்துரைகள்படி, சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் ஆண்டுக்கு 180 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கடந்த 2012 முதல் பணிக்கு சேர்க்கப்படுகின்றனர்.

ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பொறுத்தமட்டில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் நேரடி சேர்க்கை நியமன எண்ணிக்கை 200 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.