மெல்போர்ன்: இந்திய வீரர்கள் தொடருக்கு முன்பாக, ஆஸ்திரேலிய மண்ணில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நிக் ஹாக்லே.
ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான தனிமைப்படுத்தல் நாட்கள் குறைவாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பிசிசிஐ தலைவர் கங்குலி வெளியிட்டிருந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
நிக் ஹாக்லே கூறியுள்ளதாவது, “14 நாட்கள் தனிமைப்படுத்தல் என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. இந்த காலக்கட்டத்தில் வீரர்களுக்கு சிறப்பான தயாராகும் வாய்ப்புகள் அமையும். மேலும், சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.
ஹோட்டல் அல்லது மைதானத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் எதுவாயினும், வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். முடிந்தளவு உயர் பாதுகாப்பு சூழலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்” என்றார் அவர்.