சென்னை: சனி, ஞாயிறு விடுமுறை தினங்களையொட்டி, இந்த வாரம்,  வெளி மாவட்டங்களுக்கு  கூடுதலாக  1,130  பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

வெளியூர் செல்லும் பயணிகளின் தேவைக்காக, சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும், . பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1130 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது

இதுதொடர்பாக  அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முகூர்த்த தினமான இன்று மற்றும் வார விடுமுறை நாளான நாளை சனிக்கிழமை (2-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை (3-ந்தேதி) ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு இன்று 365 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 425 பஸ்களும் இயக்கப்படும்.

மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) 70 பஸ்களும், நாளை 70 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, தினசரி இயக்கக் கூடிய பஸ்களுடன் கூடுதலாக இன்று 435 சிறப்பு பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 495 பஸ்களும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1130 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.