சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஆகஸ்டு  10ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்  என  அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், ஏற்கெனவே நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

அதன்படி, வரும் 10ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப் படுகின்றன.

 தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in/ http://tnresults.nic.in/ http://tnresults.nic.in/ ஆகிய இணைய தளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவு அனுப்பப்படும்.

இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்பு வழங்கப்படாது. அதற்குப் பதிலாக, மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின், வரும் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை, பயின்ற பள்ளியின் வாயிலாக குறை தீர்க்கும் படிவத்தினை பூர்த்தி செய்து, பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக அரசுத் தேர்வுத் துறை இணைய தளம் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். வரும் 17ஆம் தேதி முதல், 21ஆம் தேதி வரை, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.