சேலம்: சேலத்தில் 2,134 சுய உதவி குழுக்களுக்கு 104 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருத்தணியில் நடைபெற்ற  அரசு விழாவில்  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவி களை வழங்கினார். அதன்படி, மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7லட்சத்து 56ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியை  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நடைபெற்ற அரசு விழாவில் கடனுதவிகள் மற்றும் நலத் திட்ட உதவிகளை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மாவட்டங்கள் தோறும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்டத்தில், 2,134 சுய உதவி குழுக்களுக்கு 104 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் நடந்த விழாவில் மொத்தம் 5,437 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.268.91 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

சேலம் தொங்கும் பூங்கா அரங்கில் நடைபெற்ற விழாவின்போது, முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சி காணொலிக் காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. மேலும், ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 2,137 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 27,970 உறுப்பினர்களுக்கு ரூ.104.19 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், எம்எல்ஏ-க்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) செல்வம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்லில் தமிழ்நாடு மாநில ஊரகம், நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் 1,802 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.97 கோடியே 57 லட்சம் வங்கிக்கடனுக்கான காசோலையை வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு. வடிவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நேற்று நடந்தது. விழாவில், எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், திருமகன் ஈவெரா, சி.சரஸ்வதி, தமிழ்நாடு கேபிள் டிவி நிருவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, 1498 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.67.15 கோடி மதிப்பிலான வங்கிக்கடன், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.