டெல்லி: 10,094 குழந்தைகள் அனாதைகள், 1.36 லட்சம் குழந்தைகள் கோவிட் சமயத்தில் பெற்றோரையோ இழந்துள்ளனர் என குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம்  ( NCPCR -National Commission for Protection of Child Rights) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் சூமோட்டோ வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில்,  குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் கூடுதல் பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஏப்ரல் 2020 முதல் ஜனவரி 11, 2022 வரையிலான தரவுகளின் அடிப்படையில், கூடுதல் பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் என்சிபிசிஆர் தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே ஜனவரி தேதியிட்ட பிரமாணப் பத்திரத்தில் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தது.

இதையடுத்து, தற்போது,  பால் ஸ்வராஜ் போர்ட்டல்  தளத்தில் பதிவேற்றப்பட்ட தரவுகளின் அடிப்படையில் குழந்தைகளின் நிலை குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்து,  10, 094 குழந்தைகள் அனாதைகளாகி உள்ளனர். இதுமட்டுமின்றி மேலும,  1,36,910 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்  என்றும்,  488 குழந்தைகள் கோவிட் பரவிய பிறகு கைவிடப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏராளமான குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.