பாந்த்ரா

காராஷ்டிரா அரசு மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாந்திரா நகரில் பாந்திரா மாவட்ட அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது.   இங்குள்ள குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் சுமார் 17 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த குழந்தைகள் பிறந்து சில நாட்கள் ஆனதில் இருந்து 3 மாதம் வரையில் உள்ளவை ஆகும்.

இச்சிகிச்சைப் பிரிவில் இருந்து திடீரென புகை தென்பட்டது.  அங்கிருந்த செவிலியர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவர்கள்  மற்றும் ஊழியர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர்.  அதற்குள் தீ வேகமாகப் பரவி அந்த பகுதி முழுவதையும் சூழ்ந்தது.  இதையொட்டி அந்த குழந்தைகளை மீட்கும் பணி தொடங்கியது.  17 குழந்தைகளும் மீட்கப்பட்டன

ஆனால் அதில் 3 குழந்தைகள் சிகிச்சை தொடங்கும் முன்பே இறந்தன.  அதைத் தவிர 7 குழந்தைகள் புகை காரணமாக கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் இழந்துள்ளன.  மீதமுள்ள 7 குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட முதல்வர் உத்தவ்  தாக்கரே மரணமடைந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ,5 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.

இது குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.