சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2,109 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய தொகையும் அடங்கும்.

கடந்த மார்ச் மாதம் முதல் மாநகராட்சி தரப்பில் கட்டாயமாக வழங்க வேண்டிய பணம் கூட நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சென்னையில் துப்புரவுப் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலுவைத் தொகையை சமாளிப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினர். அப்போது, சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டும் என மாநகராட்சி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அடுத்த 5 மாதங்களில் நிலுவைத் தொகை மேலும் ரூ.2,800 கோடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு ரூ.2,000 கோடி நிதியுதவி வழங்கினால் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும் என்றும் அவர்கள் கூறினர்.

சென்னை மாநகராட்சிக்கு ஒப்பந்ததாரர்களிடம் நிலுவைத் தொகை இருப்பது புதிதல்ல. ஆனால், தற்போது துப்புரவுப் பணிகளுக்கான கட்டாயத் தொகையே வழங்கப்படாமல் இருப்பதால், ஒப்பந்த நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒப்பந்த விதிகளின்படி, இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கு கட்டாயமாக வழங்க வேண்டிய 50 சதவீதத் தொகையும், பணியின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட (KPI) தொகையும் வழங்கப்பட்டுள்ளன. அதன்பிறகு கட்டாயமாக வழங்க வேண்டிய தொகை கூட வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார் கூறுகையில், ஏற்கெனவே பணிகள் முடிந்து பில்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ரூ.2,000 கோடிக்கும் அதிகமான தொகை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. இதுதவிர, தற்போது நடைபெற்று வரும் பணிகளுக்காக மேலும் ரூ.1,500 கோடி செலவாகும் என்றார்.

கடந்த மாதம் நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனங்களின் நிலுவைத் தொகையைச் செலுத்த ரூ.300 கோடி ஓவர்டிராஃப்ட் பெற முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.

மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் ஆர்.ராமாராவ் கூறுகையில், மாநகராட்சியால் பில்கள் அனுமதிக்கப்பட்டும் பணம் வழங்கப்படாதபோது, RXIL எனப்படும் TReDS தளத்தை அணுகுவது வழக்கம். மாநகராட்சியின் ஒப்புதலுக்குப் பிறகு RXIL பணத்தை வழங்கும். அந்தத் தொகையை மாநகராட்சி 3 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். தாமதமானால் கூடுதல் வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

ஆனால், மாநகராட்சியால் RXIL-க்கு உரிய காலத்தில் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாததால், தற்போது இதுபோன்ற கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக ராமாராவ் குற்றம்சாட்டினார்.

துணை மேயர் மகேஷ் குமார் கூறுகையில், தாமதமாக பணம் செலுத்தினால் கூடுதல் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். தற்போதைய நிதி நிலைமையில் அந்தச் செலவை மாநகராட்சியால் சமாளிக்க முடியாது என்றார்.

திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளும் உர்பேசர் சுமீத் நிறுவனத்துக்கு ரூ.500 கோடியும், ராம்கி நிறுவனத்துக்கு ரூ.250 கோடியும் மாநகராட்சி வழங்க வேண்டியுள்ளது என துணை மேயர் தெரிவித்தார்.

இதற்கிடையே, தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகளுக்கான நிலுவைத் தொகை ரூ.303.19 கோடி என்றும், செயல்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.723.58 கோடியும், இதர செலவுகளுக்காக ரூ.318.40 கோடியும் வழங்க வேண்டியுள்ளது என்றும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

துப்புரவுப் பணிகளில் தொழிலாளர்களின் சம்பளத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அந்தத் தொகை அவ்வப்போது வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.