மெக்கா அருகே ஹவுத்திகள் ஏவியதாகக் கூறப்படும் ட்ரோனை சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, புனித நகரமான மெக்காவுக்கு முதல்முறையாக வான்வழி தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சவுதி தெரிவித்துள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்திகள் நடத்தியதாகக் கூறப்படும் இந்த ட்ரோன், மெக்காவின் தடை செய்யப்பட்ட வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பாகவே செவ்வாய்க்கிழமை மாலை சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவுதி தலைமையிலான கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி தெரிவித்துள்ளார்.

மெக்காவை குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் முயற்சி இது இரண்டாவது முறையாகும் என்றும், இதற்கு முன்பு 2017-ல் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் முயற்சி நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்லாமியர்களின் புனித தலங்கள் அமைந்துள்ள மெக்கா, சவுதிக்கு மிகவும் முக்கியமான பகுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், மெக்காவை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என ஹவுத்திகள் மறுத்துள்ளனர். சவுதி கூறுவது ஏற்கெனவே பலமுறை சொல்லப்பட்டு வந்த பழைய பொய் என ஹவுத்தி அரசியல் குழு உறுப்பினர் ஹாசெம் அல்-அசாத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முந்தைய நாளில் மெக்கா, ஜெட்டா, தாயிஃப் பகுதிகளில் சவுதி சிவில் பாதுகாப்புத் துறை அவசர எச்சரிக்கை விடுத்திருந்தது. மக்கள் வீடுகளுக்குள் இருக்கவும், ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. சிறிது நேரத்திலேயே அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. மெக்காவுக்கு இதுபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது இதுவே முதல்முறை என சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மெக்கா மற்றும் மதீனா பகுதிகளில் ஹவுத்திகள் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) கண்டனம் தெரிவித்துள்ளது. புனித தலங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்க முடியாதது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சவுதி பகுதிகளில் சமீபகாலமாக ஹவுத்திகளின் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஜசான் பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 2 பேர் காயமடைந்ததுடன், ஒரு மசூதி, கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக சவுதி தெரிவித்துள்ளது. கமீஸ் முஷாயித், அப்ஹா, தாயிஃப் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 13 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் கூட்டுப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், சவுதியின் எண்ணெய் கட்டமைப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 11-ம் தேதி நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சுமார் 1,200 கி.மீ. நீளமுள்ள கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாயில் எண்ணெய் போக்குவரத்தை சவுதி நிறுத்தியது.

ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் எண்ணெய் ஏற்றுமதிக்கு மாற்று வழிகளை சவுதி அதிகம் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணெய் குழாய் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும், ஏமனின் செங்கடல் கடற்கரைப் பகுதிகளில் ஹவுத்திகள் தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருவதால், உலகின் முக்கிய கப்பல் மற்றும் எரிசக்தி போக்குவரத்து பாதையான பாப் அல்-மந்தப் நீரிணை குறித்தும் கவலை அதிகரித்துள்ளது.

ஹவுத்திகளுக்கு எதிராக சவுதி இதுவரை பெரிய அளவிலான நேரடி பதிலடி தாக்குதலை நடத்தாமல், சர்வதேச ஆதரவை திரட்டி வருகிறது. ஆனால், தொடர்ந்து அதிகரித்து வரும் தாக்குதல்கள் சவுதி மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளன. இந்த மோதல் தற்போது ஈரான்–அமெரிக்கா இடையிலான பிராந்திய மோதலுடனும் தொடர்புபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.