புளோரிடா

ன்று 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் நாசாவால் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்து உள்ளன. தற்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாசாவுடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சுழற்சி முறையில் மனிதர்களைச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. இப்படிச் செல்லும் குழு 6 மாதங்கள் விண்வெளியில் தங்கும். கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் எண்டெவர் விண்கலத்தில் குழு-6 அனுப்பப்பட்டது.

தற்போது குழு-6ன் பயணக் காலம் முடிவடைய உள்ளதால் குழு-7 ஐ விண்வெளி நிலையத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இன்று புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து குழு-7 உடன் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இந்த குழுவில் நாசா விண்வெளி வீரர் மற்றும் மிஷன் கமாண்டர் ஜாஸ்மின் மொக்பெலி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விண்வெளி வீரர் மற்றும் பைலட் ஆண்ட்ரியாஸ் மொகென்சென், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விண்வெளி வீரர் சடோஷி புருகாவா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் கான்ஸ்டான்டின் போரிசோவ் ஆகியோர் உள்ளனர்.