வீட்டில் அதிர்ஷ்டமும், யோகமும் காத்திருக்க எவ்வகை சத்தங்கள் இருக்க வேண்டும்?.
நம் முன்னோர்கள் நமக்கு வழி வகுத்துச் சென்ற சில விஷயங்கள் உளவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நமக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். அவற்றில் ஒரு சில விஷயங்களைப் பெண்கள் செய்வதால் அந்த வீட்டில் அதிர்ஷ்டமும், யோகமும் உண்டாகும். என்ன தான் ஒருவருக்கு நல்ல விஷயங்கள் தேடி வந்தாலும், அது நிலைப்பதில் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால் தான் அதிர்ஷ்டமே நம்மைத் தேடி வரும் என்பது மறுக்க முடியாத உண்மை. அவ்வகையில் இந்த சத்தம் வீட்டில் கேட்டுக் கொண்டே இருந்தால் நல்ல யோகம் பெறலாம் என்பது நியதி. அப்படியான சத்தங்கள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.
முதலாவதாக வீட்டில் அசுப சொற்களைப் பேசுவதன் மூலம் அந்த வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி அதிகரிக்கத் துவங்கி விடும். எதையும் பாசிட்டிவாக நினைப்பது போல், எதையும் பாசிட்டிவாக பேசவும் வேண்டும். ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமையான செயலும் உண்டு. திருவள்ளுவர் கூறியது போல் தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆனால் நாவினால் சுட்ட புண் எப்போதும் ஆறுவதில்லை. நீங்கள் வீசும் வார்த்தைகள் தடித்தால், அதனுடைய விளைவுகளும் அந்த வீட்டைச் சுற்றி உலா வந்து கொண்டிருக்கும். அதனால் தான் இனிமையான வார்த்தைகள் பேசும் வீட்டில் செல்வ வளம் அதிகமாகக் காணப்படுகிறது. கெட்ட வார்த்தைகள் பேசுபவர்கள் வீட்டில் வறுமை குடிகொண்டிருக்கிறது.
 சனியனே, உருப்பட மாட்ட, விலங்க மாட்ட, நாசமா போவ என்பது போன்ற வார்த்தைகளைத் தப்பித் தவறியும் உபயோகிக்காதீர்கள். இதன் சத்தமானது, அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்களைப் பெருகச் செய்து விடும். அது போல் நல்ல சத்தங்களும் அதிர்ஷ்டத்தைப் பெருகச் செய்யும். அவ்வகையில் பெண்கள் அணியும் கொலுசு சத்தம் பேரதிர்ஷ்டத்தை உண்டு பண்ணும்.
வீட்டில் எப்பொழுதும் கொலுசு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தால், அந்த வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி வைப்ரேஷன் எப்போதும் நிலைத்து நிற்கும். அதனால் தான் பெண்களைக் கொலுசு அணியாமல் இருக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதிக முத்துக்கள் கொண்ட கொலுசை அணிவது வீட்டில் மகிழ்ச்சியை நிறைந்திருக்கச் செய்யும். ஆனால் பெண்கள் இப்போதெல்லாம் அதிக முத்துக்கள் இருக்கும் கொலுசுகளை விரும்புவதில்லை.
அதே போல் பெண்கள் அணியும் வளையல்களில் தங்கத்தை விடச் சிறந்தது கண்ணாடி வளையல் தான். கண்ணாடி வளையல் சத்தம் ஒரு வீட்டில் தினமும் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்த வீட்டில் அதிர்ஷ்டம் நிச்சயம் வந்து சேரும். சிலருக்கு இயற்கையாகவே சில நேரங்கள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். ஆனால் அந்த அதிர்ஷ்டம் நிலைக்குமா? என்பதில் தான் சூட்சமம் உள்ளது. இப்படி வரும் அதிர்ஷ்டத்தை நிலைக்க வைப்பதில் பெரும் பங்கு கண்ணாடி வளையல் சத்தத்திற்கு உண்டு. அதிர்ஷ்டத்தைத் தடை செய்யும் இடையூறுகளைத் தகர்த்தெறிந்து வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும்.
பெண்கள் வளையல் அணியாமல் ஒருபோதும் பூஜைகளைச் செய்யக் கூடாது. பெண்கள் அணியும் வளையல் கண்ணாடி வளையல் ஆக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும். நிறையக் கண்ணாடி வளையல்களை அணிந்து கொண்டு இருப்பவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்களும் நடக்கும். ஒரு வீட்டில் தொடர்ந்து கண்ணாடி வளையல் சத்தம் மற்றும் கொலுசு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்த வீட்டில் நிச்சயம் பெரும் அதிர்ஷ்டம் மற்றும் யோகம் வந்து சேரும்.