Vishal
‘பேசும் தெய்வம்’ படத்தில் பாடிய ‘நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க’ என்ற பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. இந்தப்பாடலை பாடியவர் பின்னணி பாடகி சரளா. இவர், ஏராளமான படங்களில் பாடி இருக்கிறார்.
எம்.ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீர், தூக்குமேடை நாடகங்களிலும் பின்னணி பாடல் பாடியுள்ளார். சரளாவுக்கு தற்போது 76 வயது. இவரது கணவர் சுவாமிநாதன் காலம் சென்றுவிட்டார்.
தற்போது வயதான நிலையில் தனது இரண்டு மகள்களுடன் சென்னை போரூர் அருகே உள்ள கோவூரில் 1,500 ரூபாய் மாத வாடகை கொடுத்து சிறிய வீட்டில் வசித்து வருகிறார். அன்றாட செலவுக்கு பணம் இல்லாமல் வறுமையில் கஷ்டப்படுவதாக அவர் தெரிவித்து இருந்தார்.
இது குறித்த செய்தி அறிந்ததும், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பாடகி சரளாவை தொடர்பு கொண்டு மாதம் தோறும் தனது தேவி அறக்கட்டளை மூலமாக 5 ஆயிரம் உதவி வழங்குவதாக தெரிவித்தார். இந்த மாதத்துக்கான உதவி தொகையை தனது ரசிகர் மன்ற தலைவர் ஜெயசீலன், செயலாளர் ஹரி ஆகியோர் மூலம் சரளாவிடம் வழங்கினார்.