மயிலாடுதுறை மயூரநாதசுவாமி திருக்கோயில்

இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது.  இத் திருத்தலத்தில் தான் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த முதலாம் திருமுறையின் 38வது திருப்பதிகம் 404 முதல் 414 வரையிலான திருப்பதிக பாடல்கள், மூன்றாம் திருமுறையின் 748 முதல் 758 வரையிலான பாடல்கள் மற்றும் ஐந்தாம் திருமுறையின் 387 முதல் 397 வரையிலான பாடல்கள் பாடப்பெற்றது. இத்தலத்தில் அம்பாள் மயில் வடிவில் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. காசிக்குச் சமமான ஆறு திருத்தலங்களில் ஒன்று.

இறைவன், இறைவி

இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் மயூரநாதர், இறைவி அபயாம்பிகை.

அமைப்பு

 ஒன்பது நிலையுள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் இடது புறம் குளம் உள்ளது. அடுத்துள்ள கோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அடுத்துக் காணப்படும் மண்டபத்தில் இடப்புறம் கணபதி சன்னதி உள்ளது. அச்சன்னதியின் முன்பாக மூஞ்சுறு, பலிபீடம் உள்ளன. இடப்புறம் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. இந்த மண்டபத்தில் பலிபீடம், நந்தி, இரு கொடி மரங்கள் உள்ளன.

அடுத்துள்ள நுழைவாயிலைக் கடந்ததும் வலப்புறம் அதிகார நந்தி உள்ளது. திருச்சுற்றில் பதஞ்சலி, வியாக்ரபாதர், சேக்கிழார், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், விநாயகர், சப்த மாதர், 63 நாயன்மார்களின் செப்புத்திருமேனிகள், 63 நாயன்மார்கள், சகஸ்ரலிங்கம், நாயகர், இந்திர லிங்கம், அக்கினி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், விஷ்ணு லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், பிரம்ம லிங்கம், மகாலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

மூலவராக மயூரநாதர் உள்ளார். கருவறையின் இடப்புறம் திருமுறைக்கோயில் உள்ளது, தொடர்ந்து நடராஜர் சன்னதி காணப்படுகிறது. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். திருச்சுற்றில் விநாயகர் சன்னதி, சுப்ரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. வெளிச்சுற்றில் இடப்புறம் நாதசர்மா சன்னதி உள்ளது. அச்சன்னதிக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன.

அடுத்து அனவியதாம்பிகை சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் வாகனங்கள்,விநாயகர், லிங்கோத்பவர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வரசித்தி விநாயகர், ஆடிப்பூர அம்மன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அம்மன் சன்னதிக்கு எதிர் புறமாக ஆதிமயூரநாதர் சன்னதி உள்ளது. அச்சன்னதிக்கு முன்பாக பலிபீடமும், நந்தியும் உள்ளன. வலப்புறம் கணபதியும், இடப்புறம் சுப்ரமணியரும் உள்ளனர்.

மயிலாடுதுறை சப்தஸ்தானம்

மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும்.

பங்கேற்கும் பிற கோயில்கள்

அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்

கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில்

மூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமிகோயில்

சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர் கோயில்

துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில்

சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில்

 இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) இந்த மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்த ஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. துலா ஸ்நானம், துலா கட்டம் படித்துறையில் ஒவ்வொரு வருடமும் தீர்த்தவாரி நடைபெறும். ஐப்பசி மாதம் முதல் நாள் ஆரம்பித்து, கடை முழுக்கு ஐப்பசியின் கடைசி நாளன்று நிறைவடைகிறது.