No-confidence motion Modi’s response?

புதுடெல்லி:
ரும் 8 ஆம் தேதி மக்களவையில் பிரதமர் மோடி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விசாரணை நடைப்பெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பிரதமர் மோடி மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதிக்கப்படும் என்றும் 10 ஆம் தேதி பிரதமர் மோடி இந்த விவாதங்களுக்கு பதிலளிப்பார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் இதுவரை ஒருநாள்கூட முழுமையாக நடைபெறாத நிலையில் உள்ளது எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி அவைகளை முடக்கி வருகின்றனர். மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி பதில் அளிக்க கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருவதால், இரு அவைகளும் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதே போல தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகரராவ் கட்சியான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நமா நாகேஸ்வர ராவும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்தார்.

இதுகுறித்து கூறிய எதிர்க்கட்சியினர், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், மணிப்பூர் விவகாரம் உள்பட எங்களது பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் பதில் கூற, நம்பிக்கையில்லா தீர்மானம் நல்ல வாய்ப்பாக இருக்கும். பிரதமரை பேசவைக்க வேறு வழி இல்லை’’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் வரும் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பதால் அனைத்து விவாதங்களுக்கும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.