1234
தி.மு.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்பதற்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ‘‘தி.மு.க., அ.தி.மு.க.விற்கு எதிரி நான், ஸ்டாலினுக்கு எதிரி அவரே தான்’’, என்று விஜயகாந்த் விமர்சனம் செய்து பேசியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- ஆக எனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்று சொல்லியிருக்கிறார் என்ற அந்த அர்த்தத்தில்தான் அப்படி பேசியுள்ளதாக நான் எடுத்துக் கொள்கிறேன். எனது எதிரி யார் என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் நானே எதிரி என்று பேசியிருப்பதாக நான் அப்படி எடுத்துக் கொள்கிறேன்.
கேள்வி:- தேர்தல் அறிக்கையில் கல்விக்கடன் ரத்து செய்வது பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. அது எந்தவகையில் ரத்து செய்யப்படும் ?
பதில்:- அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு கருணாநிதி தேர்தல் நேரத்தில் சொன்னதைத்தான் செய்வார், செய்வதைத்தான் சொல்வார் என்பதை கடந்த கால வரலாறு நிரூபித்துக் காட்டியுள்ளது. வரக்கூடிய காலங்களிலும் அதை நிரூபிப்பார்.
கேள்வி:- தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்ல என்னென்ன விஷயங்கள் கையாளப்படுகிறது?
பதில்:- இளைஞர்கள், மாணவர்கள், மகளிர், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள், ஆசிரிய பெருமக்கள், நெசவாளர்கள், விவசாயிகள் என்று எல்லாத்தரப்பு மக்களுடைய நாடித்துடிப்பை அறிந்து, அதற்கு ஏற்றவகையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. இது தானாகவே மக்களிடத்தில் சென்றடையும்.
கேள்வி:- விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் என அறிவிக்கப்பட்டுள்ளது, அது எந்தளவுக்கு செயல்படும்?
பதில்:- முழுமையாக செயல்படுத்தப்படும் என்பதாலேயே அதை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம்.
கேள்வி:- வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?
பதில்:- விரைவில் கருணாநிதி வெளியிடுவார்.
கேள்வி:- மதுவிலக்கு சட்டம் கொண்டு வருவோம் என்று சொல்லியிருப்பது மக்களை திசை திருப்பும் செயல் என்று விமர்சனம் வைக்கப்பட்டு இருப்பது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்:- இதுபற்றி கருணாநிதி தெளிவாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கேள்வி:- தாங்கள் அளித்த வாக்குறுதிகளையே தி.மு.க.வும் வெளியிட்டு இருப்பதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளாரே ?
பதில்:- அவர் எப்போதும் இப்படித்தான் தேவையற்ற வகையில் எதையாவது சொல்வார். அதற்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.
கேள்வி:-அ.தி.மு.க. தேர்தல் விதிகளை மீறி செயல்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுவதைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
பதில்:- இதற்கு தேர்தல் கமிஷன் தான் பதில் சொல்ல வேண்டும்.
கேள்வி:- நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கி இருப்பதாக நினைக்கிறீர்கள்?
பதில்:- ஏற்கனவே கருணாநிதியால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை தேர்தலின் ‘‘ஹீரோ’’ என்று சொல்வார்கள். இந்த தேர்தல் அறிக்கை ‘‘சூப்பர் ஹீரோ’’வாக இருக்கிறது. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.