DMK women’s team massive protest

சென்னை:
தி.மு.க. மகளிர் அணி சார்பில் (23.07.2023) நாளை மறுநாள் திமுக கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்மையை நிர்வாணப்படுத்தித் தலைகுனிய வைத்த மணிப்பூர், மத்திய அரசு தடுக்கத் தவறியதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் (23.07.2023) நாளை மறுநாள் திமுக கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “ பா.ஜ.க.ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு விதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கற்பழிக்கப்பட்ட மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக ஊடகச் செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது. நாய்மையை அவமானப்படுத்தும் இந்நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு தடுக்கத் தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார். மத்திய பாஜக அரசும் மகளிருக்கெதிரான இக்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது.

மணிப்பூர் கலவரம் தொடங்கிய நேரத்திலேயே தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதி அவர்கள், தனது கண்டனத்தையும், கவலையையும் சமூக ஊடக வாயிலாக வெளிப்படுத்தினார்.

இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான நெஞ்சைப் பதற வைக்கும் இக்கொடுமையைக் கண்டித்து, வரும் 23.07.2023 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 4 மணியளவில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தொடர்ச்சியாக 24.07:2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும், மாவட்டக் கழகச் செயலாளர்கள், மகளிர் அணி அமைப்பாளர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டங்களை சிறப்பாக நடத்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நேற்றே கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதில், “மணிப்பூரில் இரண்டு பெண்களை பலாத்காரம் செய்த கொடூரமான செயல் அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் பிரித்தாளும் அரசியலால் இந்த நாடு உண்மையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

பதட்டமான சூழ்நிலை மற்றும் அமைதி, அதை நிவர்த்தி செய்வதில் மத்திய பாஜக அரசாங்கத்தின் நிர்வாகக் குறைபாடு ஆகியவை மிகவும் தெளிவாகத் தெரிகிறது. மணிப்பூரில் வசிப்பவர்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தை உறுதி செய்ய சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்.” என பதிவிட்டார்.