டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து  கேள்வி எழுப்ப நாடாளுமன்ற எதிர்க்கட்சி யினர் திட்டமிட்டு உள்ளனர்.

பாராளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2023 குடியரசு தலைவர் உரையுடன்   ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக நடத்தப்படும் என பாராளுமன்ற விவகார குழு அறிவித்திரந்தது. அதன்படி, பட்ஜெட்  கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி முதல்  ஏப்ரல் 6 வரை 27 அமர்வுகளுடன் 66 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

முதல்தொடர் ஜனவரி 3ந்தேதி தொடங்கிய நிலையில்,  பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில், மொத்தம் 10 அமர்வுகள் நடைபெற்றன. முதல் அமர்வின்போது, ஜனாதிபதி திரவுபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் 2023-24 மத்திய பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. பின்னர்,  பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இன்றுமுதல் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. இரண்டாவது அமர்வு மொத்தம் 17 அமர்வுகளைக் கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக நேற்று மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், சபையின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது.

இந்த கூட்டத்தொடர் தொடர்பாக, காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தலைமையில் அவரது நாடாளுமன்ற அலுவலகத்தில்  எதிர்க்கட்சியினர் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளனர்.