valuthu1
சித்திரைத் திருநாளையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
உழைப்புடனும், கொண்டாட்டத்துடனும் நெருங்கிய தொடர்புள்ள சித்திரை திருநாளை கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தை திங்கள் முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்பதற்கு எத்தனையோ வரலாற்று சான்றுகள் உள்ளன. அதன்படி தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். அதே நேரத்தில் சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரை முழுநிலவு நாளில் தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவார்கள். அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும் காலம் என்பதால் சித்திரை திங்கள் முழுவதும் ஊர் எங்கும் திருவிழாக்கள் நடைபெறும். மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பர். ஆனால் ஊழல் நிறைந்த ஆட்சியில் தமிழக மக்களால் கனவில் கூட மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை.
அடுத்தடுத்து நான்கு ஆண்டுகளாக வாட்டி வதைத்த வறட்சியின் பிடியிலிருந்து தமிழக மக்களால் மீள முடியவில்லை. பட்டகாலிலேயே படும் என்பதற்கிணங்க கடந்த ஆண்டில் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் பெரும் துன்பத்தையும், பொருள் இழப்பையும் சந்தித்தனர். அந்த பாதிப்பிலிருந்து பொருளாதார ரீதியிலும், மனதளவிலும் இன்று வரை அவர்களால் மீள முடியவில்லை. ஆட்சியாளர்கள் எங்கு சென்றாலும் அங்குள்ள மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது தான் வரலாறு. ஆனால், ஆடம்பரம் மற்றும் அகங்காரத்தின் அடையாளமாக திகழும் ஆட்சியாளர்கள் ஓட்டு கேட்க செல்லும் இடங்களில் கூட உயிரிழப்புகள் தொடர்கதையாகின்றன.
இந்த சோகங்களுக்கு எல்லாம் முடிவு கட்டப்படும் நாள் நெருங்கி விட்டது. சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா என்பதால் இந்த நாளில் தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் ஊழல்களும், தீமைகளும் அகன்று உண்மையும், நன்மையும் துணை சேரும் என்று நம்பலாம். உலகுக்கே உணவு படைக்கும் உழவர் வாழ்விலும், உழைக்கும் தமிழர் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் சூழ வேண்டும் என்பதற்காக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள தமிழ் மக்களாகிய நாம் நமது இலக்கை நெருங்கி விட்டோம். இன்னும் ஒரு மாதத்தில் இலக்கை எட்டி மாற்றத்தை ஏற்படுத்தி, அனைவருக்கும் முன்னேற்றத்தை பரிசாக வழங்குவதற்காக உழைக்க இந்நாளில் உறுதியேற்போம்!