qwee
தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழ்நாடு முழுவதும் 15 நாட்கள் சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். கருணாநிதி 17 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்: 93 வயதிலும் வேனில் சென்று ஆதரவு திரட்டுகிறார்
சென்னை:
வருகிற 23–ந்தேதி தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் அவர் அடுத்த மாதம் (மே) 14–ந்தேதி வரை பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். மொத்தம் அவர் 15 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார். மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் 16 மாவட்டங்களுக்கு அவர் சென்று பேச உள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், “எங்கள் தலைவர் தமிழ்நாடு முழுவதும் சென்று பேச விரும்புகிறார். வேனில் இருந்தபடி அவர் நிறைய இடங்களில் பேசுவார். அதற்கு ஏற்ப அவரது பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது” என்றார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி 17 பொதுக் கூட்டங்கள், 17 தெருமுனை கூட்டங்கள் என 34 இடங்களில் பேச உள்ளார், இதில் சைதாப்பேட்டை, புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, விழுப்புரம், நெல்லை, ராஜபாளையம், மதுரை, காஞ்சீபுரம், சேலம், கிருஷ்ணகிரி, கோவை, திருவாரூர், சென்னை ஆகிய ஊர்களில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். தினமும் மாலை 4 மணிக்கு கருணாநிதி பிரசாரம் தொடங்குகிறார். இரண்டு அல்லது மூன்று கூட்டங்களில் பேசுவார்.
சிறு நகரங்களில் அவர் வேனில் அமர்ந்தபடி பேசுவார். 93 வயதாகும் கருணாநிதி கடந்த 2009–ம் ஆண்டு சக்கர நாற்காலியில் அமர நேரிட்டாலும் தன் வயதைப் பொருட்படுத்தாமல் இளைஞன் போல சுறுசுறுப்பாக பிரசார களத்தில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.கருணாநிதியுடன் அவரது பிரத்யேக மருத்துவர் டாக்டர் கோபால், தனி உதவியாளர்கள் பிரசார பயணம் முழுவதும் உடன் இருப்பார்கள். இவர்கள் தவிர அந்தந்த மாவட்ட தி.மு.க. செயலாளர்கள், மூத்த தலைவர்களும் கருணாநிதியுடன் பிரசார பயணத்தில் பங்கேற்பார்கள்.
இதுகுறித்து கருணாநிதிக்கு நெருக்கமான டாக்டர் ஒருவர் கூறுகையில, “தி.மு.க. தலைவருக்கு ரத்த அழுத்தமோ, சர்க்கரை உள்ளிட்ட எந்த பிரச்சினையும் இல்லை. அவரது உணவு மற்றும் தினசரி நடவடிக்கைகள் வழக்கம் போல உள்ளன. சுற்றுப் பயணத்தின் போது இடையிடையே காபி, ஹார்லிக்ஸ், இளநீர் அருந்துவார். அவர் வழக்கமான சுறுசுறுப்புடன் பிரசாரத்துக்கு தயாராக உள்ளார்” என்றார்.