srilanka
பாமக நிறுவனர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கை மீனவர்களுக்கு 150 படகுகளையும், 300 பேருக்கு மீன்பிடி கருவிகளையும் வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டு மீனவர்களை ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இலங்கையை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா தானாக முன்வந்து படகுகள் உள்ளிட்ட உதவிகளை வாரி வழங்குவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சகத்தில் மீன்வள அமைச்சர் மகிந்தா அமரவீரா முன்னிலையில் நடைபெற்ற பேச்சுக்களின் முடிவில் இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே. சின்ஹாவும், இலங்கை மீன்வளத்துறை செயலர் திருமதி.அதிகாரியும் கையெழுத்திட்டுள்ளனர். இதன்படி இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு 150 படகுகளையும், 300 பயனாளிகளுக்கு மீன்பிடி கருவிகளையும் இந்திய அரசு வழங்கும். ரூ.4.5 கோடி மதிப்புள்ள இப்பொருட்களை இலங்கையிலேயே கொள்முதல் செய்து அங்குள்ள மீனவர்களுக்கு வழங்கப்படும் என இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்ஹா தெரிவித்துள்ளார். இது தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசு இழைத்த துரோகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்தியா போன்ற நாடுகள் தங்களைச் சுற்றியுள்ள சிறிய நாடுகளுக்கு இதுபோன்ற உதவிகளை வழங்குவதை இயல்பான சூழலில் குறை கூற முடியாது.
இன்னும் கேட்டால் அது இராஜதந்திரமாக பார்க்கப்படும். ஆனால், இலங்கைக்கு இந்தியா இத்தகைய உதவிகளை செய்வதை அப்படி பார்க்க முடியாது. ஏனெனில், உதவிகள் எனப்படுவது நல்லெண்ணம் கொண்ட நாடுகளால் நல்லெண்ணம் கொண்ட பிற நாடுகளுக்கு வழங்கப்படுவதாகும். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு தீமை, துரோகங்களை தவிர வேறு எதையும் செய்யாத இலங்கையை நல்லெண்ணம் கொண்ட நாடாகவோ, அதற்கு செய்யப்படும் உதவியை நல்லெண்ணம் கொண்டதாகவோ எப்படி பார்க்க முடியும்?
இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா தமிழக மீனவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருப்பவர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தால் ரூ.25 கோடி அபராதம் விதிப்போம் என்று எச்சரித்தவர். கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலங்கை மீனவர் சங்கங்களின் கூட்டத்தில் பேசிய அவர்,‘‘இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அதனால் தான் பொங்கல் திருநாளுக்கு பிறகு ஒரு மாதத்தில் 500 மீனவர்களை அவர்களின் படகுகளுடன் கைது செய்ய சிங்கள கடலோர காவல்படைக்கும், கடற்படைக்கும் ஆணையிட்டிருக்கிறேன். இந்தியா எங்கள் நட்பு நாடு தான். இந்தியா கேட்டுக்கொண்டால் சில காலத்திற்கு பிறகு மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வோம். ஆனால், அவர்களின் படகுகளை ஒரு போதும் விடுவிக்க மாட்டோம்’’ என்று கூறினார்.