சென்னை:

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின், துணிப்பை, வாழை இலை, பாக்கு மர இலை ஆகிய மாற்றுப் பொருட்களை நோக்கி பொதுமக்கள் படிப்படியாக சென்று கொண்டிருக்கின்றனர்.


ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னரும் பிளாஸ்டிக் பைகளை விற்ற வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், துணிப் பைகள், வாழை இலை, பாக்கு மர இலைகளை நாடி மக்களின் கவனம் மெதுவாக சென்று கொண்டிருக்கிறது.
இதனால் உணவகங்கள், வணிக நிறுவனங்களில் இவற்றுக்கு வரவேற்று கிடைத்துள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது:
கடந்த டிசம்பர் மாதத்துக்கு முன்பு திருமண பரிசு மற்றும் பெரிய ஜவுளி நிறுவனங்களுக்கான பைகளுக்கு மட்டுமே எங்களுக்கு ஆர்டர்கள் வந்து கொண்டிருந்தன.

தற்போது சிறு வியாபாரிகளிடமிருந்தும் எங்களுக்கு ஆர்டர் கிடைக்கிறது.
காகிதப் பை தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது, பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்தது, மக்களிடம் நல்ல சுற்றுச்சூழல் நட்புறவை ஏற்படுத்தும் என்றார். 10 ஆண்டுகளாக காகிதப் பை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். மாதம் 5 லட்சம் பைகளை தயாரிக்கின்றேன். இனி ஆர்டர் மேலும் அதிகரிக்கும் என்று நம்புகின்றேன் என்றார்.
காகிதப் பை நல்ல மாற்றாக இருந்தபோதிலும், மீண்டும் உபயோகப்படுத்த முடியும் என்பதால், மக்கள் துணிப்பையையே அதிகம் விரும்புகின்றனர். வாழைப்பழம் மற்றும் பாக்கு மர இலைக்கும் வரவேற்பு அதிகமாகியிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பழையபடி வாழை இலைக்கும், துணிப் பைக்கும் மக்கள் திரும்புவதால் தங்கள் வருவாய் உயரும் என்று நம்பிக்கையுடன் விவசாயிகள் உள்ளனர்.
பாக்கு மர இலையில் சூடான உணவைப் போட்டு உண்டால் உடல் நலம் என்று கூறுகிறார்கள் கோயம்புத்தூரில் உள்ள பேரூர் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள். வாழை விவசாயிகளுக்கு திருமண நாள் முடிந்த பின், வருவாய் குறைந்து விடும்.

மார்கழி மாதம் தவிர தை போன்ற விசேஷ மாதங்களில் வாழை இலை நல்ல விலைக்குப் போகும்.
ஆனால், பிளாஸ்டிக் தடைக்குப் பின் எல்லா நாளும் வாழை இலை தேவை ஏற்படுவதால், விலை குறைவாகவே கிடைக்கும் என்கிறார்கள் வாழை விவசாயிகள். வாழை இலையை ஒரு மாதம் வரை பாதுகாக்க, வேளாண் பல்கலைக்கழகம் ஆலோசனை வழங்கினால், பேருதவியாக இருக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.