திருவாரூர்:

நாடாளுமன்ற தேர்தலுடன் திருவாரூர் இடைத்தேர்தல் நடத்தலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற  அனைத்துக்கட்சி கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து  தேர்தல் அலுவலரான  திருவாரூர் கலெக்டர்  அலுவலகத்தில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த  கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிமுக சார்பில் சின்னராஜ் , திமுக சார்பில் விஜயன் , சிபிஎம் கட்சி சார்பில் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அரசியல் கட்சியினர்,   நாடாளுமன்றத் தேர்தலுடன் திருவாரூர் தொகுதிக்கும் தேர்தலை நடத்தலாம் என  வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது கஜா புயல் பாதிப்பு காரணமாக நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால், பணிகள் முடிவடைந்த பின் தேர்தலை நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய திமுக முன்னாள் எம்.பி. விஜயன், திருவாரூர்  தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது  எனினும் புயல் நிவாரண பணி முழுமையாக நடைபெற வேண்டும் என்று கூறினார்.

கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில், தேர்தல் நடத்தலாமா? என்பது குறித்து விளக்கம் அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் ஆணையரிடம் அறிக்கை கேட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று அவசர கூட்டம் நடைபெற்றது.