index
பீப் சர்ச்சையில் சிக்கிய சிம்பு, வெளியில் தலைகாட்ட முடியாத நிலையில் (தலைமறைவு இல்லை என்று அவர் அப்பா டி.ஆர் சொல்லிவிட்டார்!!) அவர் நடிக்கும், “அச்சம் என்பது மடமையடா” படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி அவசரமாக வெளியிடப்பட்டது ஏன் என்பது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுவது என்ன?
“கௌதம் மேனன், ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு கூட்டணியில் “விண்ணைத்தாண்டி வருவாயா” படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இதையடுத்து மீண்டும் இதே கூட்டணி இணைந்து, “அச்சம் என்பது மடமையடா” படம் உருவானது.
இந்தப்படத்தை தமிழில் சிம்புவை வைத்தும், தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா மகன் அகிலை வைத்தும் இயக்கினார் கௌதம். தெலுங்கு வெர்ஷனின் படப்பிடிப்பு எந்தவித பிரச்சினையும் இன்றி நடந்தது. ஆனால் சிம்பு கொடுத்த சிக்கல்களால், தமிழ் வெர்ஷன் உருவாவதில் சிக்கல் ஏற்பட்டது. படப்பிடிப்புக்கு சரியாக வராதது, வந்தாலும் நடிக்காமல் பொழுதைக்கழித்தது என்று சிம்பு செய்த டார்ச்சர்கள் கொஞ்சநஞ்சமல்ல.
இந்த நிலையில் பீப் சர்ச்சையில் சிம்பு சிக்கியதால், மீதமிருக்கும் காட்சிகளை அவரை வைத்து எடுக்க முடியாத நிலை.
கௌதமுக்கு பல்வேறு காரணங்களால் பணப்பிரச்சினை. பொதுவாக டெக்னீஷினியன்களுக்கு சம்பள பாக்கியே வைக்காத கௌதம் இந்த “அச்சம் என்பது மடமையடா” படத்தில் பலருக்கு பாக்கி வைத்திருக்கிறார். அவரது சூழல் தெரிந்ததால், டெக்னீஷியன்களும் அமைதியாக இருக்கிறார்கள்.
ஆகவே, “அ.எ.ம” படத்தின் தெலுங்கு பதிப்பில் கவனம் செலுத்தி, னார். அதை மட்டும் விரைவில் வெளியிட திட்டமிட்டார். அப்போதுதான் அவர் பணப்பிரச்சினைகளில் இருந்து மீளமுடியும். (இது குறித்து கடந்த 28ம் தேதி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.)
இந்த விஷயத்தை அறிந்த டி.ராஜேந்தர் பதறிப்போய்விட்டார். இதன் பிறகுதான் கோயில், யாகம் என்று கிளம்பினார் டி.ஆர். அதோடு, “அ.எ.ம. படத்தின் தெலுங்கு பதிப்பு மட்டும் வெளியானால், சிம்புவுக்கு சிக்கல் ஏற்படும். ஆகவே அந்தப் படத்தின் டிரெய்லரையாவது வெளியிடுங்கள் என்று கௌதமை வற்புறுத்தினார்.
இதற்கு கௌதம் ஆரம்பத்தில் உடன்படவில்லை. சிம்பு மீது மிகுந்த அன்பு கொண்டவர்தான் கௌதம். ஆனால், எப்போது வரும் என்று தெரியாத படத்துக்கு டிரைய்லர் வெளியிடுவது சரியா என்கிற எண்ணம்தான் அவருக்கு.
ஆனால் டி.ஆரின் தொடர் வற்புறுத்தலோடு, சிம்புவும் கோரிக்கை வைத்திருக்கிறார். இதனால் கௌதமுக்கு குழப்பம். பிறகு ஒருவழியாக டிரெய்லரை வெளியிட திடுமென முடிவெடுத்து நேற்று வெளியிட்டுவிட்டார்” என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.
இன்னொரு புறம், “அந்தப்படத்தில் சிம்பு நடிக்க வேண்டிய காட்சிகள் சிலதான் இருக்கின்றன. தவிர பாடல் காட்சிகளிலும் நடிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே ஏற்கெனவே எடுத்த காட்சிகளை வைத்து, பாடல்காட்சிகளை ஒப்பேற்றி வெளியிடலாமா” என்ற குழப்பமான ஆலோசனையும் நடந்துகொண்டிருக்கிறது” என்கிறார்கள்.
ஹூம்.. சிம்பு என்றாலே சிக்கல்தான்!