விஜயவாடா

டந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒய் எஸ் சர்மிளா கூறி உள்ளார்.

ஆந்திராவின் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ். சர்மிளா  ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியைத் தொடங்கினார்.  கடந்த 4 -ந்தேதி இவர் தனது கட்சியைக் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.

டில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் ஒய்.எஸ். சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பிறகு ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஒய்.எஸ்.சர்மிளா நியமிக்கப்பட்டார் .

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர்,

“என்னைக் காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்களும் நம்பியது பெருமைக்குரிய விஷயம். கடந்த 5 ஆண்டுகளாக ஆந்திரவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் அதற்கு முன், தெலுங்கு தேசம் கட்சியும் ஆட்சியில் இருந்தது. இங்கு இந்த 10 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக ஆந்திரா நிதிக்காகப் பாடுபடுகிறது. 

சரியான மூலதனத்தை சந்திரபாபு நாயுடு உருவாக்கவில்லை. மூன்று தலைநகரங்களை அறிவித்த ஜெகன்மோகன் ரெட்டியால் ஒரு தலைநகரைக் கூட உருவாக்க முடியவில்லை. இங்கு குறைந்தபட்சம்  ஒரு மெட்ரோ கூட கிடையாது.

ஆந்திர மாநிலத்தின் கடன்கள் அனைத்தையும் சேர்த்தால் 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 10 புதிய, பெரிய தொழிற்சாலைகள் கூட கடந்த 10 ஆண்டுகளில் வரவில்லை. வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை. தலித்துகள் மீதான தாக்குதல்கள் 100 சதவீதம் அதிகரித்துள்ளன. 

பாஜகவுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், தெலுங்கு தேசம் கட்சியும் பா.ஜ.க.வுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளன.  பாஜக மத்தியில் 10 ஆண்டுகளாக. ஆட்சியில் உள்ளது. 2 கோடி வேலை வழங்குவதாக பாஜக கூறியும் ஆந்திராவில் பா.ஜ.க.வால் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் கூட கொடுக்க முடியவில்லை.” 

என்று கூறி உள்ளார்.