அயோத்தி: உ.பி. மாநிலம் அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் பிரமாண்டமான ராமர்கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகம் (பிரான் பிரதிஷ்டை) செய்யப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பொதுமக்கள் ராமபிரரானை குதூகலத்துடன் கொண்டாடி வருகின்றனர்.  ராமர்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, ராமர்கோவில் மட்டுமின்றி அயோத்தி முழுவதும் மின்னொளியில் ஜொலிக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா பிரான் பிரதிஷ்டை விழா இன்றுமதியம் 12.20 மணிக்குத் தொடங்கி 1 மணிக்குள் நடைபெறவிருக்கிறது. இந்த  நிலையில், அயோத்தி இராமர் கோவில் வண்ண மலர்கள் மற்றும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. மேலும், அயோத்தி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

ராமர்கோவில் கும்பாபிஷேகம்  (பிரான் பிரதிஷ்டை) விழாவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்கிறார். எனவே, பிரான் பிரதிஷ்டைக்கு முந்தைய சிறப்புச் சடங்குகள், இராமா் கோவிலில் கடந்த சில நாள்களாக கோலாகலமாக நடைபெற்று வந்தன. முக்கிய பூஜைகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு, நேற்று நாட்டின் பல்வேறு புண்ணிய தீர்த்தக் கட்டங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு கோவில் கருவறை முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டது. அதேபோல, பல்வேறு புனித நதிகள் மற்றும் நீர்நிலைகளில் இராம் லல்லா நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து, ஷியா அதிவாஸ், அகோர் ஹோம் மற்றும் ராத்ரி ஜாக்ரன் மற்றும் வாஸ்து சாந்தி அனுஷ்டானம் போன்ற பிற முக்கிய சடங்குகளும் நடைபெற்றன. இதையொட்டி, நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் 81 கலசங்கள் நிறுவப்பட்டு, இராம் லல்லா விக்ரஹத்தின் ஷர்க்ரா அதிவாஸ் மற்றும் பால் அதிவாஸ் மற்றும் பிற சடங்குகள் செய்யப்பட்டன.

மேலும், பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு, அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. கோவில் முழுவதும் மலர்கள், சிறப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. நகரெங்கிலும் ஸ்ரீராமர் தொடா்பான கருத்துருவில் கண்கவர் பதாகைகள், அலங்கார வளைவுகள், வில் அம்பு வடிவங்கள் நிறுவப்பட்டுள்ளன.

மக்கள் மீது கருணை மழை பொழியும் இராமரின் அருளைத் தேடி நாடு மற்றும் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான இராம பக்தர்கள் அயோத்தி நகரில் திரண்டிருக்கிறார்கள். கோவில்களில் கீர்த்தனை, பஜனை, இராமாயணம், இராமசரிதமானங்கள் தொடர்ந்து ஓதப்பட்டு வருகின்றன. சாலைகளில் மக்கள் ஸ்ரீராமரின் துதியைப் பாடுகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இவ்விழாவில் பங்கேற்க இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான வி.வி.ஐ.பி.க்கள் வந்திருக்கிறார்கள். ஆகவே, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அயோத்தி நகரின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, வாகனங்கள் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

10,000-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. அதேபோல, வான் கண்காணிப்புப் பணிகளில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்கள் அயோத்தியின் தெருக்களிலும் சந்திப்புகளிலும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சரயூ நதியில் நீச்சல் பயிற்சி பெற்ற போலீஸாரும், மீட்புப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். போலீஸார் நாள் முழுவதும் கட்டிடங்கள் மற்றும் பிற இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். மேலும், அயோத்தியின் தெருக்களில் அணிவகுத்துச் செல்கின்றனர். அசாத்திய பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

இன்று பிரான் பிரதிஷ்டை நிறைவடைந்த பிறகு, நாளை முதல் கோவிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு உணவு வழங்கும் வகையில், இஸ்கான் உள்ளிட்ட ஆன்மீக அமைப்புகள் மற்றும் பல்வேறு கோவில்களின் அறக்கட்டளைகள் சாா்பில் அன்னதானக் கூடங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

இன்றை ராமர்கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 10ஆயிரம் பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளன.  நாட்டிலுள்ள பிரபல தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஜெயின், பௌத்தம், சீக்கியம் உள்ளிட்ட மதத் தலைவர்கள், ஆதீன கர்த்தர்கள், மடாலய அதிபதிகள், சங்கராச்சாரியார்கள் ஆகியோர் அடக்கம்.

அதேபோல, அயோத்தி இராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வாதாடிய வழக்கறிஞர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, இறந்த கர சேவகர்களின் குடும்ப உறுப்பினர்கள், ராம் மந்திர் இயக்கத்தின் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இந்து துறவிகள், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்களின் முக்கிய நபர்கள், நோபல் பரிசு, பாரத ரத்னா, பரம்வீர் சக்ரா, பத்ம விருதுகள் ஆகியோரும் அழைப்புப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள், இராணுவ முப்படைகளின் ஓய்வு பெற்ற தலைவர்கள், முன்னாள் தூதுவர்கள், நிர்வாக அதிகாரிகள், புத்திஜீவிகள், விளையாட்டு வீரர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல, நாட்டின் உலகளாவிய நிலையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்களில் இருந்து மொத்தம் 55 பேர், கிட்டத்தட்ட 50 நாடுகளில் இருந்து அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.