சூரத்

ணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வீடுகளின் விலை குறைந்து பல இளைஞர்கள் வீடு வாங்கி உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் வருடம் நவம்பர் மாத்ம் 8 ஆம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதனால் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் ஒரே இரவில் செல்லாமல் போனது. அதனால் மக்கள் இந்த நோட்டுக்களை மாற்ற கடும் துயருற்றனர். இதற்கு மக்களில் பல தரப்பினரும் தங்கள் கண்டனங்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று குஜராத் மாநிலம் சூரத் நகர் விமான நிலையத்தில் ஒரு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் தனது உரையில், “பலர் என்னிடம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் என்ன பயன் என என்னிடம் கேட்கிறார்கள். இதை அவர்கள் என்னிடம் கேட்காமல் இளைய தலைமுறையினரிடம் கேட்க வேண்டும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வீடுகள் விலை மலிந்தது. இதனால் பல இளைஞர்களால் வீடுகள் வாங்க முடிந்தன. பல கருப்புப் பண முதலைகள் தங்கள் பணத்தை ரியல் எஸ்டேட்டுகளில் முதலீடு செய்திருந்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம் கடினமாக்கப்பட்டு இளைஞர்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் வாங்க உதவியது.

அது மட்டுமின்றி தற்போது சிவில் விமான போக்குவரத்து துறை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு பண மதிப்பிழப்பு நடவடிக்கை முக்கிய காரணமாகும். அத்துடன் பாஜக அரசு இந்த நான்காண்டு காலத்தில் 1 கோடியே 30 லட்சம் வீடுகள் கட்டி உள்ளன. இந்த பொருளாதார முன்னேற்றம் எதனால் வந்தது?” என வினா எழுப்பி உள்ளார்.